மரம் இயற்கையின் வரம் கட்டுரை

Maram Iyarkaiyin Varam Katturai In Tamil

இந்த பதிவில் இயற்கை சமநிலையை பேணும் “மரம் இயற்கையின் வரம் கட்டுரை” பதிவை காணலாம்.

மனித குலத்தின் பாதுகாப்பு கவசமாக விளங்குகின்ற மரங்களை மனிதர்கள் அழிப்பதனால் இன்று பூமியில் காலநிலை மாற்றமானது உருவாகியுள்ளது.

மரம் இயற்கையின் வரம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆக்சிஜன் மூலாதாரம்
  3. உயிர்களின் வாழ்விடம்
  4. மரங்களின் பயன்கள்
  5. மரங்களின் இழப்பு
  6. முடிவுரை

முன்னுரை

இந்த பிரபஞ்சத்தின் அழகான அதிசயங்கள் பல நாம் வாழ்கின்ற பூமியிலே காணப்படுகின்றன. அவற்றில் மரங்கள் தனித்துவமானவை.

மனிதர்களை போல நகரவோ பேசவோ முடியாதவை என்றாலும் இவை இன்றி மனிதர்களால் வாழ முடியாது. மனிதர்கள் துணையின்றி மரங்கள் வாழந்துவிடும் ஆனால் மனிதர்கள் வாழ மரங்கள் மிகவும் அவசியமானவையாகும்.

பச்சை பசேல் என்று இந்த பூமியை அழகாக்கி எண்ணற்ற பல பயன்களை மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் தந்து கொண்டிருப்பதனால் மரங்களை வரங்கள் என்றே கூறவேண்டும். இக்கட்டுரையில் மரங்களின் அவசியம் மற்றும் பயன்கள் பற்றி நாம் நோக்கலாம்.

ஆக்சிஜன் மூலாதாரம்

இந்த உலகத்திலே பலவகையான உயிரினங்கள் இங்கே வாழ்கின்றன. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ் அங்கிகள் என எல்லா உயிரினங்களும் சுவாசிக்க பிராண வாயு எனப்படும் ஒட்சிசன் மிகவும் அவசியமானதாகும்.

ஒட்சிசன் வாயு கிடைக்காவிட்டால் இங்கே எம்மால் உயிர்வாழ முடியாது. அத்தகைய வாயுவை வளிமண்டலத்துக்கு அதிகம் வெளியிடுவது தாவரங்கள் தான்.

வளிமண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட் வாயுவை தாவரங்கள் சுவாசித்து பின்பு ஒட்சிசனை இந்த சூழலுக்கு வெளிவிடுவதன் மூலமாக இந்த பூமியை சமநிலையாக வைத்திருக்கின்றன.

உயிர்களின் வாழ்விடம்

இந்த மரங்கள் இங்கே பல கோடி உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகின்றன. காடுகள் தான் வனவிலங்குகளின் வதிவிடம் மனிதன் கூட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் தான் வாழ்ந்தான். மரங்களின் பொந்துகளிலும் கிளைகளிலும் அவற்றின் நிழலிலும் தான் இவை காலம் காலமாக வாழ்ந்து வருகின்றன.

பறவைகள் மரங்களின் கிளைகளில் கூடு கட்டி வாழ்கின்றன. கூட்டம் கூட்டமாக பல உயிரினங்கள் இந்த மரங்களை நம்பியே வாழ்கின்றன.

சூழலின் உணவு சங்கிலியானது உற்பத்தியாக்கி எனும் தாவரங்களில் இருந்து துவங்குகின்றது. இவை தான் ஒரு பெரிய உணவு வலையை கட்டமைக்கின்றது எனலாம்.

மரங்களின் பயன்கள்

மரங்களின் பயன்கள் எண்ணிலடங்காதவையாகும். நாம் உண்பதற்காக பழங்களையும் கிழங்குகளையும் தானியங்களையும் இவை தருகின்றன. எமது வாழ்விடங்களை அமைத்து கொள்ள மரங்கள் பயன்படுகின்றன.

நாம் சுவாசிக்க சுத்தமான காற்றை தருகின்றன. இங்கே மழை உருவாகவும் மரங்களே காரணமாய் அமைகின்றன.

பல நோய்களை குணப்படுத்துகின்ற மருந்துகளை சில தாவரங்களே வழங்குகின்றன. அழகான பாதுகாப்பான நிழல் தரும் மரங்கள் கோடைகாலத்தின் வரப்பிரசாதங்கள் என்றே கூறலாம். இவ்வாறு மரங்களின் பயன்கள் எண்ணற்றவையாகும்.

மரங்களின் இழப்பு

இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் உலக நாடுகள் அபிவிருத்தியை இலக்காக கொண்டு நகராக்கம் மற்றும் கைத் தொழில் நடவடிக்கைகளை அதிகம் முன்னெடுப்பதால் காடுகளை அதிகம் அழிக்க துவங்கி விட்டனர்.

இதன் விளைவால் அதிகளவான மரங்கள் இங்கே அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக பல பாதகமான சூழல் தாக்கங்கள் இங்கே நிகழ துவங்கியுள்ளன.

எங்கு பார்த்தாலும் கட்டடங்களாக மாறியுள்ள இன்றைய காலத்தில் மரங்களை காண்பது அரிதாகி விட்டது.

முடிவுரை

மனித குலத்தின் பாதுகாப்பு கவசமாக விளங்குகின்ற மரங்களை மனிதர்கள் அழிப்பதனால் இன்று பூமியில் காலநிலை மாற்றமானது உருவாகியுள்ளது. இதன் காரணமாக பலவகையான ஆபத்தான அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன.

இவை அனைத்தும் மனிதன் இயற்கையின் வரமான மரங்களை அழிப்பதன் விளைவால் உருவானவையே. மனிதர்கள் இன்று மரங்களின் அவசியத்தை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்துள்ளனர்.

இனிவரும் காலங்களிலாவது மரங்களை பாதுகாத்து எமது வருங்கால சந்ததியினரும் வாழும் சூழலை உருவாக்குவோம்.

You May Also Like :
காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை
பசுமை இந்தியா கட்டுரை