மாணவர் ஒழுக்கம் கட்டுரை

Manavar Olukkam Katturai In Tamil

இந்த பதிவில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க தேவையான “மாணவர் ஒழுக்கம் கட்டுரை” பதிவை காணலாம்.

கல்வியுடன் கூடிய நல்லொழுக்கத்தோடு வளரும் குழந்தைகளே வாழ்க்கையில் வெற்றிவாய்ப்புகளை அதிகம் பெறுகின்றனர்.

மாணவர் ஒழுக்கம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஒழுக்கத்தின் இலக்கணம்
  3. பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்கம்
  4. ஒழுக்கத்தின் மேன்மை
  5. ஒழுக்கத்தால் உயர்வு பெற்றோர்
  6. முடிவுரை

முன்னுரை

நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம் ஆகும்.

நல்லவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் வளர வேண்டுமானால் மாணவர்களுக்கும் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுத்தருவது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கைகளில்தான் உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இக்கட்டுரையில் மாணவர் ஒழுக்கம் பற்றி நோக்கலாம்.

பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்கம்

பாடசாலைகளில் மாணவர்களின் நடத்தை மிக முக்கியமானதாகும். சீருடை, தோற்றம், நடத்தைக் கோலம், சகமாணவர்களுடனான உறவு, சீரான வரவு, பாடங்களில் கூடிய கவனம், உயர்ந்த அடைவுமட்டம்,

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் கூடிய பங்களிப்பு, அதிபர் ஆசிரியர்களிடத்தில் பணிவான நடத்தை என்பன குறித்து ஒழுக்கமான நடத்தைகளை மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து கற்றுக் கொள்கின்றனர்.

ஒழுக்கத்தின் இலக்கணம்

சான்றோர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துள்ளனர். அதனை கடைப்பிடித்து ஒழுகுவதே ஒழுக்கமாகும். ஒழுக்கம் என்பது நன்நெறிகளின் தொகுப்பாகும்.

பண்புடைமை, பணிவுடைமை, பெரியோரைப் போற்றுதல், இன்சொல் கூறல், பிறருக்கு உதவி செய்தல், நல்லோரோடு நட்புக் கொள்ளல், உண்மையைப் பேசுதல், பிறருக்குத் தீங்கு செய்யாதிருத்தல், மது அருந்தாமல் இருத்தல், புறங்கூறாமல் இருத்தல், பொறாமை கொள்ளாது இருத்தல் போன்ற நற்பண்புகள் போன்ற அனைத்தும் ஒழுக்கத்தில் அடங்கும்.

ஒழுக்கத்தின் மேன்மை

ஒழுக்கம் உயர்வைத் தரும் எனவே மனிதன் எதை இழந்தாலும் ஒழுக்கத்தை இழத்தல் கூடாது. ஒழுக்கம் உடையோர் மேன்மை உடையவர்களாவர். ஒழுக்கம் இல்லாதவர்கள் இழிவை அடைவர்.

எனவே தான் திருவள்ளுவர் “பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை” என்று கூறியுள்ளார்.

ஒழுக்கமானது செல்வம், புகழ், பெருமை அனைத்தையும் தரும். ஒழுக்கத்தின் அங்கமாக அன்பு, அருள், இரக்கம், கருணை, பண்பு, பாசம், பொறை, தியாகம், தொண்டு முதலியன உள்ளன. இவற்றைப் பின்பற்றி வாழ்கின்றவர்கள் சிறந்த ஒழுக்க சீலர்களாக உலகில் வலம் வருவர்.

ஒழுக்கமானது சிந்தனையில் உயர்வைக் கொடுக்கும், உறவை வளர்க்கும், அன்பைப் பெருக்கும், அமைதியைக் கொடுக்கும், ஒழுக்கம் நம்மை சாதனை புரியத் தூண்டும் மனப்பான்மையை வளர்க்கும், தங்களை உலகிற்கு அடையாளம் காட்டும்.

ஒழுக்கத்தால் உயர்வு பெற்றோர்

ஆசையே அழிவுக்குக் காரணம் என்று உணர்த்திய புத்தர், இரக்கமே உருவான இயேசுபிரான், உண்மையை போற்றிய உலக உத்தமர் காந்தியடிகள் இவர்கள் அனைவரும் ஒழுக்கத்தால் விழுப்பம் பெற்றவர்களாவர்.

இதிகாசத்தில் பிறன்மனை நோக்காப் பேராண்மை கொண்ட ராமபிரான், தருமமே உருவாய் அமைந்த தருமர், அழுக்காறு படைத்த துரியோதனன் போன்ற பாத்திரப்படைப்புகள் இவ்வுலகிற்கு ஒழுக்கத்தின் உயர்வை உணர்த்தியுள்ளன.

முடிவுரை

கல்வியுடன் கூடிய நல்லொழுக்கத்தோடு வளரும் குழந்தைகளே வாழ்க்கையில் வெற்றிவாய்ப்புகளை அதிகம் பெறுகின்றனர். அதற்கு அவர்களைக் குழந்தைப் பருவத்திலேயே பழக்கப்படுத்திவிட வேண்டும்.

மாணவர் ஒழுக்க விழுமியங்களில் கல்வித் துறையினர், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

பாடசாலை மாணவர்களுக்கு ஒழுக்கநெறி சார்ந்த கற்கைகளை அதிகப்படுத்த வேண்டும்.

வருங்காலச் சமுதாயத்தைத் தாங்கும் தூண்களாகிய மாணவர்கள் ஒழுக்க சீலர்களாக வளரும் போது தான் நாடும், வீடும் நலம்பெறும் என்பதனை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும்.

You May Also Like :
தனிமனித ஒழுக்கம் கட்டுரை
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை