புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்

புகை பிடித்தல் ஏற்படும் விளைவுகள்

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப் பழக்கம். புகைப்பிடித்தல் ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்த போதிலும் உலகளாவிய ரீதியில் அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக இல்லை.

உலகம் முழுவதும் பல கோடி பேர் புகைப்பிடிக்கின்றனர். உலக அளவில் சட்டத்துக்கு புறம்பான சிகரெட்டு விற்பனையில் இந்தியா 5வது மிகப் பெரிய சந்தையாக உருவாகியுள்ளது. புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்

ஆயுட்காலம் குறைவடைகின்றது.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் ஆயுள் பாதியாக குறையும். ஒரு நிமிடம் புகைப்பிடிப்பதனால் ஆயுட்காலத்தில் 14 நிமிடங்களை இழக்க வேண்டி ஏற்படும்.

உலகம் முழுவதும் புகையிலையால் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழக்கிறார். ஒவ்வொரு வருடமும், உலகம் முழுவதும் 71 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துவதால் மட்டுமே உயிரிழக்கின்றனர்.

உள ஆரோக்கியம் பாதிப்படையும்.

புகைப்பிடிப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். புகை பிடித்தால்தான் சாதாரணமாக உணரமுடியும் என்ற மன நிலையில் இருப்பார்கள். இது உள ஆரோக்கியத்தினை வெகுவாக பாதிக்கின்றது..

புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.

பெற்றோர்களை முன்மாதிரியாகக் கொண்டே அதிகமான குழந்தைகள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமை ஆகிறார்கள்.

புற்றுநோயை ஏற்படுத்துகின்றது.

புகையிலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசாயனங்கள் கலந்துள்ளன. அவற்றில் 69 வகை ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. நுரையீரல் மட்டும் இல்லாமல் வாய், தொண்டை, கணையம், கழுத்து, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்றவைகளில் ஏற்படும் புற்று நோயும் புகைப்பிடிப்பதால் அதிகம் வருகிறது.

சில வகை மருந்துகளுக்கு உடல் ஒத்துழைக்க முடியாத நிலைக்கு மாறிவிடும்.

புகைப்பிடித்தல் காரணமாக உடலில் நிகோடின் அளவு அதிகரிக்கின்றது. இனால் சில வகை நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருத்துக்கள் பயனற்றதாக அல்லது செயற்படாமல் போய்விடும்.

ஆண்மைக் குறைவு.

புகை பிடிப்பதால் ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. பின்நாட்களில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றது.

இதய நோய் ஏற்படுகின்றது.

இருதய நோய் மற்றும் குருதிக் (இரத்தக்) குழல் நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது.

குருதியிலுள்ள டிரைகிளிசரைட் கொழுப்புக்களை தூண்டுவதுடன் தொடர்புபட்டிருப்பதோடு, நல்ல கொலஸ்ட்ரோலை குறைத்து, குருதியின் ஒட்டும் தன்மையை அதிகரித்து அடைப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கிறது.

மூளை வளர்ச்சி தாமதமாகிறது.

இளம் வயதினர் புகைப்பிடிக்கும் போது, நினைவுத்திறன், கவனிப்புத் திறன், சுயக் கட்டுப்பாடு மற்றும் படிக்கும் திறனையும் வெகுவாகப் பாதிக்கின்றது.

முதுமைத் தோற்றம்.

அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும். தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து தோல் சுருக்கம் அடைந்து வயதான தோற்றத்திற்கு மாறிவிடுவர்.

பொருளாதாரப் ரீதியில் பாதிப்பு ஏற்படும்.

புகைப்பிடிப்பவர்கள் சிகரெட்டுக்காக தினமும் அதிகளவு பணத்தை செலவழிக்கின்றனர். பணியிடத்தில் புகைக்க முடியாதபோது அடிக்கடி வெளியில் சென்று, புகைப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டால் அது பணியிடத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சில சமயங்களில் வேலை இழக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.

You May Also Like :
உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்
பற்களில் மஞ்சள் கறை நீங்க