திருவள்ளுவர் பற்றிய கட்டுரை

Thiruvalluvar patri katturai in tamil

இந்த பதிவில் “திருவள்ளுவர் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

உலகில் வாழ்ந்து மறைந்த அரும்பெரும் புலவராகிய திருவள்ளுவர் இன்றுவரை போற்றி புகழப்பட்டு வருகின்றார். உலகில் சிறந்த புத்தகங்களில் திருக்குறளுக்கு தனி இடம் உண்டு.

திருவள்ளுவர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. திருவள்ளுவரின் வாழ்க்கைக்காலம்
  3. திருக்குறளின் சிறப்பு
  4. திருக்குறளின் உள்ளடக்கங்கள்
  5. திருக்குறள் கற்றுத்தரும் நற்குணங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகத்திலுள்ள மொழிகளிலே தமிழ் மொழியானது மிகவும் தொன்மையானதாகவும், மிகச்சிறந்த இலக்கியச்செழுமை மிக்க மொழியாகவும் காணப்படுகின்றது.

அத்தகைய பெருமையை கொண்ட தமிழ்மொழியிலே பல்வேறுபட்ட காலகட்டங்களில் பல்லாயிரக் கணக்கான இலக்கியங்களும் நூல்களும் படைக்கப்பட்டுள்ளன.

அவை தமிழர்களின் வாழ்வியல் அம்சங்களை எடுத்தியம்புவையாகவும், மனிதன் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுவனவாகவும் அமைகின்றன. இவற்றுக்கு உதாரணமாக மகாபாரதம், திருக்குறள், கொன்றைவேந்தன், சிலப்பதிகாரம், கம்பராணயம் மற்றும் ஆத்திசூடி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இக்கட்டுரையில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றி பார்க்கலாம்.

திருவள்ளுவரின் வாழ்க்கைக் காலம்

தமிழிலே படைக்கப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த நூலாக கருதப்படுவது திருக்குறளாகும். இதனை தமிழின் அரும்பெரும் புலவராகக் கருதப்படும் திருவள்ளுவர் இயற்றியுள்ளார்.

இவர் பொய்யாமொழிப்புலவர், தெய்வ பாவலர், முதற்பாவலர் என பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றார். அவரது வாழ்க்கை காலம் சரியாக வரையறுக்கப்படாத போதும், இவர் சங்கமருவிய காலத்தில் வாழ்ந்த புலவராக கொள்ளப்படுகின்றார்.

இவரது தாய் தந்தையின் பெயர்கள், வாழ்ந்த இடம் போன்றன அறியப்படாத போதும், இவரது மனைவி வாசுகியுடன் இவர் வாழ்ந்த வாழ்க்கை கணவன் மனைவிக்கு இடையிலான உறவு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்தக்காட்டாகக் கொள்ளப்படுகின்றது.

திருக்குறளின் சிறப்பு

தமிழ் மொழியில் இயற்றப்பட்ட நூல்களிலே அதிக சிறப்பு வாய்ந்த இந்த திருக்குறளானது உலகப் பொதுமறை, தெய்வநூல், உத்தரவேதம் மற்றும் வாயுறை வாழ்த்து எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

திருக்குறளானது தனிமனிதர்கள் எவ்வாறான ஒழுக்கங்களை சமூகத்தில் பேணி வாழ வேண்டும் என்பதனையும், மனிதன் செய்யக் கூடிய அறங்கள், இயற்கையோடு இணைந்து அவன் வாழும் வாழ்க்கையின் சிறப்புக்கள் என பலவகையான விடயங்களை எடுத்தியம்புகின்றது.

இதனைத்தவிர அன்றிலிருந்து இன்றுவரை மனிதர்களை நல்வழிப்படுத்த திருக்குறள்களே மேற்கோள் காட்டப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட திருக்குறளானது, முதன் முதலில் 1812ம் ஆண்டு தழிழ்மொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

தமிழ்மொழியைத் தவிர கிட்டத்தட்ட எண்பது வரையான ஏனைய பிறமொழிகளில் திருக்குறளானது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகரீதியில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறளிற்கு மூன்றாவது இடம் வழங்கப்படுகின்றது.

திருக்குறளின் உள்ளடக்கங்கள்

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என எழுத்துக்கள் எல்லாம் எவ்வாறு அகரத்தை கொண்டு ஆரம்பிக்கின்றனவோ அவ்வாறே இந்த உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டது என கடவுளை போற்றியபடி ஆரம்பிக்கும் திருக்குறளில் மொத்தமாக நூற்றுமுப்பத்துமூன்று அதிகாரங்கள் காணப்படுகின்றன.

ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறள்கள் உள்ளடங்களாக ஆயிரத்து நூற்றுமுப்பது ஈரடிக் குறள்கள் காணப்படுகின்றன.

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பகுதிகளாக பிரிப்பட்டுள்ள திருக்குறளில் காணப்படுகின்ற ஒவ்வொரு குறள்களும் அனுபவத்தன்மை வாய்ந்தனவாகவும், ஓராயிரம் கருத்துக்களை கூறுபவையாகவும் காணப்படுகின்றன.

இல்லறவியல், துறவறவியல், அரசுஇயல், அமைச்சுஇயல், களவியல் மற்றும் கற்பியல் என அதற்குள் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன.

திருக்குறள் கற்றுத்தரும் நற்குணங்கள்

ஒரு மனிதன் இப்பூமியில் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டுமாயின், அவன் பொருளீட்டுபவனாகவும், அறத்தின்பால் வாழ்பவனாகவும் இருக்கவேண்டும். அறம் தவறாமல் வாழும் போதுதான் அவனால் இன்பமயமாக வாழமுடியும்.

ஒருவன் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாகவிருந்தாலும் சரி அவன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து அறப்பண்புகளையும் திருக்குறள் வலியுறுத்துகின்றது.

ஒழுக்கமுடமை அதிகாரத்திலே “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்று ஒழுக்கம் உயிரை விட சிறந்ததாக ஒழுக்கத்தின் மேன்மை எடுத்தியம்பப்படுகின்றது. “இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” என ஒழுக்கம் இல்லையேல் பழிசொல் கேட்க நேரிடும் என்று குறிப்பிடப்படுகின்றது.

மனிதர்கள் பகுத்தறிவு உடையவர்களாய் விளங்க வேண்டும். அப்போதுதான் சிந்தித்து சரியான முடிவுகளை எடுக்க முடியும். இதனையே “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று குறிப்பிடுகின்றார்.

நாம் மற்றவர்களுக்கு எம்மை நல்வர்களாக காட்டிக் கொள்வது நல்ல அறப்பண்பல்ல. மாறாக நமக்கு நாமே நேர்மையுடையவர்களாக இருக்க வேண்டும்.

இதனை “தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னை சுடும்” என்றும், “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு மனித நற்பண்புகள் பல எடுத்தியம்பப்படுகின்றன.

முடிவுரை

உலகில் வாழ்ந்து மறைந்த அரும்பெரும் புலவராகிய திருவள்ளுவர் இன்றுவரை போற்றி புகழப்பட்டு வருகின்றார். அவரெழுதிய திருக்குறள் இன்றுவரை ஆராய்ச்சி செய்துவரப்படும் ஒரு நூலாகவே காணப்படுகின்றது.

இத்தகைய பெருமைவாய்ந்த திருக்குறளைப் பற்றியும் அதனை படைத்த திருவள்ளுவரைப் பற்றியும் அறிந்து அதனை இந்த உலகிற்கு தெரியப்படுத்தி எதிர்கால சந்ததியினரும் பயன்பெற வழிசெய்வோமாக.

You May Also Like :

குடி குடியை கெடுக்கும் கட்டுரை

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

விருந்தோம்பல் பற்றிய கட்டுரை