சுற்றுச்சூழல் என்றால் என்ன

sutru sulal enral enna tamil

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.”

அதாவது தெளிந்த நீரும், பரந்த நிலமும், உயர்ந்த மலையும், அடர்ந்த காடும் இயற்கை அரண்களாகும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வள்ளுவப்பெருந்தகை கூறியுள்ளார்.

நாம் மற்றும் நம் சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது சுற்றுச் சூழலாகும். மனிதனின் வாழ்க்கையில் சுற்றுச்சூழல் பெரும் தாக்கங்களை செலுத்துகின்றது.

சுற்றுச்சூழல் என்பது மனிதனின் வாழ்வுடன் இன்றும் தொடர்புபட்டுள்ள அரசியல், பொருளியல், சட்டம், குடிமைப்பண்பு, பண்பாடு, நீதித்துறை, சுகாதாரம் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.

சுற்றுச்சூழல் என்றால் என்ன

நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் சுற்றுச்சூழல் என்றழைக்கப்படுகின்றது.

சுற்றுச்சூழல் என்பது மனிதனுடைய அல்லது மனிதன் உள்ளிட்ட சமுதாயத்தின் வெளிப்புறத் தன்மைகளைப் பொதுவாகக் குறிப்பிடுகின்றது.

அதாவது நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள், பறவைகள் ஆகியவற்றின் இயக்கம் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது சுற்றுச்சூழல் ஆகும். இது உயிரியற்பியல் என்றும் அழைக்கப்படுகின்றது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்

பூக்களில் தேனெடுக்கும் தேனீக்களும், மலர்களைத் தேடி அமரும் சிட்டுக்குருவிகளும் நம் இதயத்தில் மகிழ்ச்சி பரப்புபவை ஆகும்.

கிராமங்கள் எங்கும் சிறகடித்துப் பறந்த சிட்டுக்குருவி இனங்களை இப்போது சரணாலயங்களில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஐப்பசி, கார்த்திகையில் அடித்துப் பெய்து கொண்டிருக்கும் மழை அண்மைக் காலங்களில் காலம் கடந்து பெய்கின்றது.

சூழல் என்பது அதன் இயல்பிலிருந்து மாறும் போது அதன் உண்மைத் தன்மையை இழந்து விடுகின்றது.

குறிப்பாக இயற்கைக் காரணி மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட காரணிகளால் சூழல் அதன் இயல்புத் தன்மையில் இருந்து மாறுபடுகின்றது.

உலக வெப்பமயமாதல், அதீத பிளாஸ்டிக் பயன்பாடு, கணக்கிலடங்காத கட்டுமானம், சுரங்கத் தொழில் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியாகும் அளவுக்கு அதிகமான புகை மற்றும் ஒலி,

அணுகுண்டு, ஹைரஐன் குண்டுவீச்சுக்களாலும், குண்டுகளைப் பூமிக்கடியிலும், கடலுக்கடியிலும் சோதித்துப் பார்ப்பதாலும், வெடிமருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுதல் போன்றவற்றால் சுற்றுச்சூழல் அதிகமாக மாசடைகின்றது.

இவையே உலகின் இயல்பை மாற்றும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதன் காரணமாக அழகிய சுற்றுச் சூழல் மாசடைவினைச் சந்தித்து வருகின்றது.

மனிதனின் பேராசையால் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் அளவிற்கு பூமிப்பந்து சந்தித்த கொடூரங்கள் எண்ணிலடங்காதவையாகும்.

காட்டை அழித்து மழையைப் பொய்க்கச் செய்தோம், நீர் நிலைகளின் வழித்தடங்களை மறித்து கட்டிடங்களை எழுப்பினோம், மரங்களை அழித்து புவியை மாசுபடுத்தினோம்.

இப்படி அன்றாடம் இந்தப் பூமித் தாயின் விலைமதிப்பற்ற பொக்கிசங்களை எவ்வித குற்ற உணர்வும் இன்றி கொலை செய்து வருகின்றோம்.

இயற்கையை அழிப்பதை நாம் நிறுத்தி சூழலைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலும், கடமையிலும் இருக்கின்றோம்.

இதற்காக குளோரோ புளூரோ கார்பன் அளவைக் குறைத்து ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

நீர்நிலைகளை அசுத்தம் செய்யாமல் இருக்க வேண்டும். நிலத்தில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது. இது போன்ற செயல்களை கடைப்பிடிப்பதன் மூலம் சூழலைப் பாதுகாக்க முடியும்.

அதுமட்டுமன்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலமும் சூழலைப் பாதுகாக்க முடியும்.

Read more: சூழல் என்றால் என்ன

உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை