நம் பள்ளி நம் பெருமை

nam palli nam perumai

இந்த பதிவில் “நம் பள்ளி நம் பெருமை” திட்டம் பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.

பெண்களுக்கு இக்குழுவில் முன்னுரிமை அளிக்கப்படுவதோடு வருடந்தோரும் இக்குழுவின் நிர்வாகம் மாற்றி அமைக்கப்படும்.

நம் பள்ளி நம் பெருமை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நம் பள்ளி நம் பெருமை திட்டம்
  • நம் பள்ளி நம் பெருமை திட்டம் நோக்கம்
  • நம் பள்ளி நம் பெருமை திட்டம் நன்மைகள்
  • ஆசிரியர், பெற்றோர், மாணவர் இடைத்தொடர்பு
  • முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் இந்த உலகில் எக்காலத்திலும் சிறந்த அழிவடையாத செல்வமாக காணப்படுவது நாம் கற்கின்ற கல்வியே ஆகும். அந்த கல்வி செல்வத்தை நமக்கு ஒழுக்கத்துடன் சேர்ந்தவாறு போதிக்கும் இடமாக பள்ளிகள் காணப்படுகின்றன.

இப்பள்ளிகளில் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்க அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றான நம் பள்ளி நம் பெருமை என்ற திட்டம் தொடர்பான விளக்கங்களை அளிப்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

நம் பள்ளி நம் பெருமை திட்டம்

தமிழ்நாட்டில் காணப்படும் அனைத்து அரசு பள்ளிகளையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு பள்ளிக் கல்வித் துறையினால் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்களை மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் 2009ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் இருந்திருக்கவில்லை. ஆனால் தற்போது இத்திட்டம் மீள உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நம் பள்ளி நம் பெருமை திட்டம் நோக்கம்

இதன் பிரதான நோக்கம் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்களை மறு சீரமைத்து அக்குழுக்களின் ஊடாக பள்ளிகளை மேம்படுத்துவது ஆகும். மேலாண்மைகுழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் போன்றோரை உள்ளடக்கிய 20 உறுப்பினரைக் கொண்ட குழுவாகும்.

இக்குழுவின் தலைவராக பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரின் பெற்றோரே பதவி வகிப்பார். பெண்களுக்கு இக்குழுவில் முன்னுரிமை அளிக்கப்படுவதோடு வருடந்தோரும் இக்குழுவின் நிர்வாகம் மாற்றி அமைக்கப்படும்.

நம் பள்ளி நம் பெருமை திட்டம் நன்மைகள்

மாணவர்களின் கற்றல் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான இடைத்தொடர்பு இத்திட்டத்தின் மூலம் வலுவாக்கப்படும்.

பள்ளி மேலாண்மை கூட்டத்தின் போது மாணவர் மற்றும் பள்ளி மேம்பாடு, பெற்றோர்களின் கோரிக்கைகள், ஆலோசனைகள் தொடர்பாகவும் மாணவர் நலன் சார் விடயங்கள் மற்றும் தேவைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும்.

இதனால் மாணவர்களின் கல்வி சார் விருத்தி தொடர்பாக விழிப்புணர்வு பெற்றோர்களான பொது மக்களிடையே ஏற்படுத்தப்படுகின்றது.

ஆசிரியர், பெற்றோர் இடைத்தொடர்பு

இத்திட்டத்தின் மூலம் ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான இடைத்தொடர்பு அதிகரிக்கின்றது. ஏனெனில் பெற்றோர் ஒருவருக்கு தன் பிள்ளையை சிறு வயது முதல் இளைஞராகும் வரை வழி நடத்தி செல்லும் ஆசிரியருடன் நெருங்கிய உறவு காணப்படுவது மிக முக்கியமாகும்.

இதனால் மாணவர்களுடைய குறை நிறைகளை பெற்றோர் அறிந்து கொள்ள கூடியதாக இருப்பதுடன் மாணவர் ஒருவரினுடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், மனநிலை தொடர்பாக ஆசிரியரும் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.

இதனால் மாத்திரமே உடல், உள, சமூக ஆரோக்கியமுடைய ஒரு பள்ளிச் சூழலையும் திறமான எதிர்கால சமூகத்தையும் உருவாக்க முடியும்.

முடிவுரை

கல்வி மேம்பாடு தொடர்பாக அதிக கவனத்தை அரசு செலுத்துவதன் விளைவாகவே பள்ளிச் சமூகங்கள் சார்ந்த பல நலத்திட்டங்களை உருவாக்கி வருகின்றது. அதற்கு சிறந்த உதாரணம் இந்த நம் பள்ளி நம் பெருமை திட்டமாகும்.

இத்திட்டங்களை வெற்றி பெற செய்து எமது நாட்டில் கல்வித்துறையை மேம்படுத்த செய்ய வேண்டிய கடமை ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.

Read more: கல்வியின் பயன்கள்

கல்வி புரட்சி கட்டுரை