திருவாதிரை களி செய்வது எப்படி

Thiruvathirai Kali Seivathu Eppadi

இந்த பதிவில் மிகவும் சுவையான திருவாதிரை களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

விஷேட தினங்களில் நாம் பல உணவுப் பண்டங்களை செய்வது வழக்கம். அவ்வாறே திருவாதிரை திருவிழாவின் போது நடராஜருக்கு படைக்க செய்யும் அரிசி களியே திருவாதிரை களியாகும்.

இக்களியானது எந்த வயதினரும் விரும்பி உண்ணக் கூடியது. செரிமானத்திற்கும் ஏற்றதாகும். நாம் வீட்டில் எம்பெருமானுக்கு இந்த நிவேதனத்தை செய்து படைப்பதன் மூலம் நடராஜரின் அருளாசியைப் பெற முடியும்.

இத்தகைய திருவாதிரை களி செய்வது பற்றி அறிந்திருப்பது நல்லதல்லவா? சரி⸴ இப்போது திருவாதிரை களி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

திருவாதிரை களி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

பச்சரிசி 1 கப்
பாசிப் பயறு1/4 கப்
வெல்லம் 2 கப்
தண்ணீர் 3 கப்
ஏலக்காய் சிறிதளவு
தேங்காய் துருவல் 1/2 கப்
அரிசிப் பருப்புசிறிதளவு
நெய் சிறிதளவு
முந்திரிப்பருப்பு சிறிதளவு
உலர் திராட்சை சிறிதளவு

திருவாதிரை களி செய்முறை

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு கடாயில் 1கப் பச்சை அரிசியை நன்கு பொரிந்து வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த அளவு அரிசி நன்கு வறுபடுகின்றதோ அந்த அளவு திருவாதிரை களி வாசனையாகவும்⸴ ருசியாகவும் இருக்கும். இதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் ¼ கப் பாசிப்பயறை போட்டு அதனையும் பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். இதனை வறுத்த அரிசியுடன் சேர்த்துக் கொள்ளவும்.

இரண்டும் சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும். (ரவை போல்)

இதன் பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் வெல்லம் சேர்த்து கூடவே ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் அடுப்பில் வைத்துக் கிளறவும். பாகு கம்பி பதம் வராமல் தண்ணீரில் நன்கு கரைந்தாலே போதுமானது. இதனை ஒரு பாத்திரத்தில் வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு வடித்த வெல்லத்தை ஒரு கடாயில் ஊற்றி அதனுடன் மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து 5நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பின் அரை கப் துருவிய தேங்காய் சேர்க்கவேண்டும். கூடவே கொஞ்சம் கொஞ்சமாக அரைத்த அரிசி பருப்பை சேர்த்து (மொத்தமாக சேர்த்தால் கட்டி தன்மை ஆகிவிடும்) நன்கு கிளறி விடவேண்டும். (மிதமான சூட்டில் அடுப்பு)

பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு நன்கு கலக்கவும். இந்தக் கலவை நிலையுடன் கடாயை மூடி போட்டு மூடி 5நிமிடம் வைக்கவும்.

இன்னொரு கடாயை எடுத்து அதில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை பொன்நிறமாக வறுத்து அதனோடு உலர் திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும். இதனை களியுடன் சேர்த்துக் கலக்கவும். கூடவே வாசனைக்காக ஏலக்காய் சேர்த்து ஒரு டீஸ்பூன் நெய்யையும் அதனோடு கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனை பரிமாறவும்

இப்போது சுவையான திருவாதிரை களி ரெடி!!!

You May Also Like:

புதினா துவையல் செய்வது எப்படி

உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்