சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் கட்டுரை

Siruvar Urimai Katturai In Tamil

இந்த பதிவில் “சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் கட்டுரை” பதிவை காணலாம்.

சிறுவர்கள் சமூகத்தில் பல துஷ்பிரயோகங்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இது அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிடும்.

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது சமூகத்தில் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

  • சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்
  • Siruvar Urimai Katturai In Tamil
பெண்களின் முன்னேற்றம் கட்டுரை

சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சிறுவர்கள் நாளைய எதிர்காலம்.
  3. சிறுவர்களின் உரிமைகள் எனப்படுவவை
  4. சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுவதன் விளைவுகள்
  5. சிறுவரகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம்
  6. சிறுவர் உரிமை தொடர்பான நிதியங்கள்
  7. முடிவுரை

முன்னுரை

எந்தவொரு செயலுடையதும் ஆரம்பம் என்பது சிறப்பாக இருக்கவேண்டும். என்பது தான் எம்முடைய எதிர்பார்ப்பு “விளையும் பயிரை முளையிலே தெரியும்” என்பது முதுமொழி.

அது போல ஒரு மனிதனுடைய எதிர்காலம் அவனது பழக்கவழக்கங்கள் சிறுபராயம் என்ற ஒன்றில் இருந்து ஆரம்பிக்கின்றது. சிறுவயதில் ஆரோக்கியமாகவும் அன்பான மற்றும் நேர் எண்ணங்கள் கொண்ட ஒரு சூழலில் வாழ்கின்ற போது தான் எதிர்காலமும் வளமானதாக அமையும்.

பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் பூமியில் நல்லவர்களாக தான் பிறக்கின்றார்கள் அவர்கள் வளருகையில் அவன் சார்ந்துள்ள குடும்பம், சமூகம் தான் அவனது வளர்ச்சியை தீர்மானிக்கின்றன.

சிறுவயது என்பது கள்ளம் கபடமற்றது அந்த பராயத்தில் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். சிறுவர் உரிமைகளும் அவற்றின் முக்கியத்துவம் என்பன தொடர்பாக இக்கட்டுரை நோக்குகிறது.

சிறுவர்கள் நாளைய எதிர்காலம்

“இந்தியாவின் நாளைய எதிர்காலம் சிறுவர்களே” என டாக்டர் அப்துல்கலாம் எப்போதும் கூறிக்கொள்வார். சிறுவர்களுக்கு கற்பிப்பதையே அவர் அதிகம் விரும்பினார்.

ஏனென்றால் இன்றிருக்கும் எல்லா குழந்தைகளும் தான் நாளைய தேசத்தை கட்டியமைக்க போகும் எதிர்கால தூண்களாகும். இதனை பெற்றோரும் மற்றோரும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.

இதனால் தான் உலகின் சிறந்த நாடுகள் அனைத்தும் தமது நாட்டின் சிறுவர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வளவாய்ப்புக்களிலும் அதிகம் கவனம் எடுத்து கொள்கின்றது.

பாதுகாப்பான சூழல், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, தரமான கல்வி, மகிழ்ச்சிகரமான சூழல் என்பவற்றை சிறுவர்களுக்காக உருவாக்குவதில் அந்த நாடுகள் கவனம் செலுத்துகின்றன.

ஒழுக்கம் நிறைந்த ஆக்கபூர்வமான சிறுவர் சமுதாயம் வளமான எதிர்கால தேசங்களை தீர்மானிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

சிறுவர்களின் உரிமைகள் எனப்படுவவை

சிறுவர்கள் எனப்படுபவர்கள் 18 வயதுக்கு குறைந்தவர்கள் ஆவர். 1989 களில் சிறுவர் உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அவற்றுள் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பதற்கான உரிமை, கல்விக்கான உரிமை என பொதுவான உரிமைகள் காணப்படுகின்றன.

இவற்றின் அடிப்படையில் சிறுவர்கள் பாதுகாக்கபடவேண்டும். இவற்றினை பின்பற்றி அரச சட்டங்கள் அமையவேண்டும். சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கபடவும் வேண்டும்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல்,போதைக்கு அடிமையாக்கல், பாலியல் துஸ்பிரயோகங்கள் போன்றவற்றில் ஈடுபடுபவது தண்டனைக்குரிய குற்றமாகும் .

இருப்பினும் அதிகாரிகளின் கவனயீனம் மிருகத்தனமான பெற்றோர்கள் போன்றவர்களால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.

சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுவதன் விளைவுகள்

சிறுவர் உரிமைகள் மீறப்படுகின்ற ஒரு தேசம் அழிவினை நோக்கி செல்கின்றது என்பது வெளிப்படை.

எதிர்கால கதாநாயகர்களாக உருவாகப் போகும் சிறுவர்கள் சிறுவயது முதலே பல கனவுகளை மனதில் சுமப்பார்கள் அவர்களது கனவுகளை மெய்படுத்துவதாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் அரசாங்கமும் இருக்க வேண்டும்.

சிறுவர்கள் அன்பாகவும் பண்பாகவும் நடாத்தப்படும் போது தான் அவர்களும் வன்முறைகளற்ற நற்பிரஜைகளாக உருவாகுவர்.

ஆனால் இன்று சில நாடுகளில் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாது வேலைக்கு அமர்த்தப்படுவதும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவதும் பாலியல் அடிமைகளாக்கப்படுவதும் சிறுவர் போராளிகளாக்கப்படுவதும் உலகமெங்கும் நடந்தேற தான் செய்கிறது.

இது அவர்களது வாழ்வை சீரழிப்பதோடு வன்முறை மிகுந்த சமுதாயத்தை உருவாக்குவதுடன் உலகத்தையே உருக்குலைக்கவல்லது.

சிறுவரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியம்

சிறுவர் உரிமைகளுக்கு மற்றைய எல்லா உரிமைகளை விட அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஏன் என்றால் ஒரு சமூகத்தை சீர் செய்ய வேண்டுமெனில் அதன் அஸ்த்திவாரங்கள் வலிமையாக்கப்பட வேண்டும்.

ஆதலால் சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சமூக அக்கறையுடையவர்கள் முனைந்து நிற்கிறனர்.

சிறுவர் உரிமை தொடர்பான நிதியங்கள்

சிறுவர் உரிமைகளை பாதுகாக்கவென்று ஐக்கிய நாடுகள் சபை பல வேலைத்திட்டங்களை உலகளவில் முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில் “Unicef, Save the children, Global Children, Children international” போன்ற சர்வதேச நிறுவனங்கள் சிறுவர்களது உரிமைகளுக்காக செயல்பட்டுவருகின்றன.

பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாதுகாத்தும் வருவது குறிப்பிடத்தக்கது. உலகளவில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஆற்றுவதில் இந்த நிறுவனங்களின் பங்கு அளப்பரியதாகும்.

யுத்தங்கள், தீவிரவாத தாக்குதல்கள், அனர்த்தங்கள் போன்றவற்றால் பாதிக்கபட்ட சிறுவர்களுக்காக இந்த நிதியங்கள் சிறப்பாக செயல்ப்பட்டு வருகின்றன

முடிவுரை

உலகத்தில் மிகச்சிறந்த நாடு எதுவென்றால் சிறுவர்கள் மிகவும் பாதுகாப்போடு வளரக்கூடிய சூழலை எந்த ஒரு நாடு கொண்டிருக்கிறதோ அந்த நாடாக தான் இருக்க முடியும்.

அன்பான பெற்றோர்கள், உயர்த்தி விடும் தியாக எண்ணம் கொண்ட ஆசிரியர்கள், மிகச்சிறந்த அரசாங்கம், நம்பிக்கை தரும் நண்பர்கள் இது போன்றவர்களால் கட்டமைக்கப்படும் சூழல் சிறுவர்கள் வாழ்வதற்கேற்ற மிகச்சிறந்த சமுதாயமாக இருக்கும்.

இவ்வாறானதொரு சமூகமே எமது குழந்தைகளது ஆக சிறந்த கனவாகவிருக்கும். இதனை உருவாக்கி தர முயல்வது அனைவரதும் கடப்பாடாகும்.

You May Also Like :

நான் விரும்பும் பள்ளி கட்டுரை

கல்வி வளர்ச்சி கட்டுரை