கருணை பற்றிய கட்டுரை

Karunai Katturai In Tamil

இந்த பதிவில் “கருணை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

மக்கள் மத்தியில் உயர்ந்த இடத்தை பெறுகின்ற மகத்தான மனிதர்கள் பெருங்கருணை உடைய மனிதர்களே.

கருணை பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உயர்ந்த அறம்
  3. கருணை என்பது
  4. கருணை உள்ளம் கொண்டவர்கள்
  5. மகத்தான மனிதர்கள்
  6. உலகம் நிலைபெற கருணை அவசியம்
  7. முடிவுரை

முன்னுரை

“அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்” என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது இந்த உலகினில் மிகவும் உயர்ந்த விடயம் கருணை நிறைந்த உள்ளம் தான். அந்த ஒரு விடயம் தான் இங்கே உயிர்களையும் இந்த உலகத்தையும் இயக்கி கொண்டிருக்கிறது. சக மனிதர்கள் மீதும் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளிடமும் கருணையோடு இருக்க வேண்டும் என்பது சான்றோர்களின் போதனையாகும்.

கருணை உடையவர்கள் தான் சுயநலம் இல்லாதவர்களாய் பிறருக்கும் உதவுகின்ற தாராள மனம் உடையவர்களாக இருப்பார்கள்.

இத்தகைய மனிதர்கள் இருப்பதனால் தான் இன்றும் இந்த உலகம் இயங்கி கொண்டிருக்கின்றது. இக்கட்டுரையில் கருணையின் மேன்மை பற்றி நோக்குவோம்.

உயர்ந்த அறம்

“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு” என அன்பாகிய கருணையின் உயர்நிலையை திருவள்ளுவர் உயர்வாக கூறி உள்ளார்.

அன்புள்ளம் படைத்தவர்கள் தான் உயிர் வாழ்கின்ற மனிதர்களாகவே கருதப்படுவார்கள் மற்றையவர்கள் உயிரற்ற வெறும் உடல் போன்றவர்கள்.

இந்த உலகத்தில் எல்லா விழுமியங்களிலும் கருணை என்பது முதல் நிலை பெறுகிறது. கருணை ஒரு மனிதனின் உள்ளத்தில் இருக்குமானால் அவனிடத்து எல்லா உயர்ந்த குணங்களும் தானாகவே வந்து சேரும். கருணை உள்ள மனிதன் உயர்ந்த நிலையினை அடைந்து கொள்வான்.

கருணை என்பது

கருணை எனப்படுவது யாது? பசியினால் வாடுகின்ற ஒரு மனிதனுக்கு உணவழித்தல், தாகத்தில் தவிப்பவனுக்கு தண்ணீர் கொடுப்பது, வலியில் துடிப்பவனுக்கு மருந்து கொடுத்து உதவுதல், ஏழ்மையில் வாழ்பவனுக்கு உதவி செய்தல், அச்சத்தில் வாழ்பவருக்கு தைரியம் கொடுப்பது, துன்பத்தில் வாடுபவர்களுக்கு ஆறுதலாய் இருத்தல் இதனை தான் கருணை என்றழைக்கின்றனர்.

இதனை தான் வள்ளலார் அவர்கள் “வாடிய பயிரை காணும் போதெல்லாம் வாடினேன்” என்கிறார். அடுத்தவர்களின் துன்பங்களில் உடனிருந்து உதவுகின்ற அந்த மனம் தான் கருணை வடிவானதாக அறியப்படுகிறது.

கருணை உள்ளம் கொண்டவர்கள்

இந்த அழகான உலகத்தை படைத்த இறைவன், எம்மை இந்த உலகத்தில் படைத்த தாய், எம்மை அன்போடும் பாதுகாப்போடும் வளர்த்த தந்தை, எமது இன்ப துன்பங்களில் உடன் இருக்கின்ற நண்பர்கள், எமக்கு கல்வியை தந்து வாழ்விற்கு வழி காட்டியாக இருக்கின்ற ஆசிரியர்கள்

இவர்கள் தான் கருணை உள்ளம் கொண்டவர்களாக எமது வாழ்வில் கூட வருகின்றனர். எந்த விதமான எதிர்பாரப்புகளும் இன்றி இவர்கள் தருகின்ற அன்பும் ஆதரவும் தான் மனிதர்களை உயர்த்துகின்றன.

மகத்தான மனிதர்கள்

வரலாற்றில் மக்கள் மத்தியில் உயர்ந்த இடத்தை பெறுகின்ற மகத்தான மனிதர்கள் பெருங்கருணை உடைய மனிதர்களே.

கொடையில் சிறந்தவனான கர்ணன், அது போல் புறாவிற்காக தன் உடலை வெட்டி கொடுத்த சிபி சக்கரவர்த்தி, முல்லை கொடிக்காக தேர் கொடுத்த பாரி மன்னன், மயிலுக்கு போர்வை அழித்த பேக மன்னன், பசுக்கன்றிற்காக தனது மகனையே மாய்க்க துணிந்த மனுநீதி சோழன், பிற்காலத்தில் அன்னை தெரேசா, மகாத்மா காந்தி என இந்த வரலாற்றில் சிறந்த மனிதர்களாக சொல்லப்படுகின்ற அனைவரும் கருணை உள்ளம் உடையவர்களாக அறியப்படுகின்றனர்.

உலகம் நிலைபெற கருணை அவசியம்

அன்புள்ள மனிதர்கள் இன்னும் வாழ்வதனால் தான் இந்த உலகம் இன்னும் நிலைத்திருக்கின்றது. “இவ்வுலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்கிறார் ஒளவையார்.

மனிதநேயமும் அன்பும் இன்னும் இந்த பூமியில் நிலைத்திருக்கின்றது. அதனால் தான் இங்கே அனைத்தும் ஒரு சமநிலையில் இயங்கி கொண்டிருக்கின்றது.

இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அன்பு என்ற ஒற்றை மந்திரத்தினால் தான் இயங்கி கொண்டிருக்கின்றன.

முடிவுரை

ஆசை, கோபம், களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்.. அன்பு, நன்றி, கருணை உள்ளவன் மனித வடிவில் தெய்வம்” என்கின்ற கவியரசு கண்ணதாசனுடைய பாடல் வரிகளினை போல

இந்த உலகத்தில் சிறிது காலம் வாழ்ந்து ஒழிகின்ற மனிதர்களாகிய நாம் பிற மனிதர்கள் மீதும் உயிர்கள் மீதும் கருணை உள்ளவர்களாக இருப்போம்.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” எனும் உயரிய அறத்தின் பால் நல்ல மனிதர்களாக வாழ்வோம்.

You May Also Like :

சிறுதுளி பெருவெள்ளம் கட்டுரை

வாய்மையே வெல்லும் கட்டுரை