உரிச்சொல் என்றால் என்ன

urisol endral enna in tamil

மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது மொழி ஆகும். சொல் என்பது ஏதோனுமொன்றைச் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக்கூறு ஆகும்.

பொருளை அறிந்து கொள்வதற்குக் கருவியாக இருக்கும் ஒலியே சொல் என்று பொதுவாகக் கூறலாம்.

சொல்லானது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று நான்கு வகைப்படும். இதில் உரிச்சொல் என்றால் என்ன அதன் வகைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உரிச்சொல் என்றால் என்ன

உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாகத் திகழும் சொல் ஆகும். பெயர்ச் சொல்லாகவோ, வினைச் சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.

“உரி” என்னும் அடைமொழியை “சொல்” என்பதனோடு சேர்த்து “உரிச்சொல்” எனப்படுகின்றது. உரிச்சொல் தமிழில் உரிச்சொல்லானது முழுச்சொல்லாகவும், குறைச்சொல்லாகவும் வரும்.

உரிச்சொல்லின் வகைகள்

உரிச்சொல்லானது இரு வகைப்படும்.

  1. ஒரு பொருட்குறித்த பலசொல்
  2. பலபொருட்குறித்த ஒருசொல்

ஒரு பொருட்குறித்த பலசொல் எடுத்துக்காட்டு

ஒரு பொருள் குறித்த பல சொல்லிற்கு உதாரணமாக

  • சாலப்பேசினான்
  • உறுபுகழ்
  • தவஉயர்ந்தன
  • நனிதின்றான்

இதில் உள்ள சால, உறு, தவ, நனி போன்றவை மிகுதி என்னும் ஒரே பொருளைத் தருகின்றது.

பலபொருட்குறித்த ஒருசொல் எடுத்துக்காட்டு

பலபொருட்குறித்த ஒருசொல்லிற்கு உதாரணமாக

  • கடிமனை – காவல்
  • கடிவாள் – கூர்மை
  • கடிமிளகு – கரிப்பு
  • கடிமலர் – சிறப்பு

இச்சொற்களில் வரும் கடி என்னும் உரிச்சொல் ஆனது பல பொருட்களை குறித்து நிற்கின்றன.

அதாவது கடிமனை என்பது காவல் என்ற பொருளையும், கடிவாள் என்பது கூர்மை என்ற பொருளையும், கடிமிளகு என்பது கரிப்பு என்ற பொருளையும், கடிமலர் என்பது சிறப்பு என்ற பொருளையும் குறித்து நிற்கின்றது.

உரிச்சொல்லின் மேலும் சில வகைகள்

  • இசை குறித்த உரிச்சொற்கள் (உதாரணம் – கொழுமூதூர்)
  • பண்பு குறித்த உரிச்சொற்கள் (உதாரணம் – கடிமாலை – மணம்மிக்க மாலை)
  • குறிப்புணர்த்திய உரிச்சொற்கள் (உதாரணம் – நனி வருந்தினை – மிகவும் வருந்தி)

உரிச்சொல் உணர்த்தும் பண்புகள்

உரிச்சொல்லானது பொதுவாக குணப்பண்பு, தொழிற்பண்பு என இருவகைப் பண்புகளை உணர்த்துகின்றது.

குணப்பண்பானது பொருளின் பண்புகளை உணர்த்தும்.

உதாரணம் – மாதர் வாள் முகம். இங்கு மாதர் எனும் உரிச்சொல்லானது விருப்பு எனும் குணத்தை உணர்த்தி நிற்கின்றது.

உரிச்சொல் குறிப்பவை

  1. உயர்திணை பண்புகள்
  2. அஃறிணைப் பண்புகள்

உயர்திணைப் பண்புகள்

உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார். அவையாவன,

  1. அறிவு
  2. அருள்
  3. ஆசை
  4. அச்சம்
  5. மானம்
  6. நிறைவு
  7. பொறை (பொறுமை)
  8. ஓர்ப்பு (தெளிவு)
  9. கடைப்பிடி
  10. மையல் (மயக்கம்)
  11. நினைவு
  12. வெறுப்பு
  13. உவப்பு (மகிழ்வு)
  14. இரக்கம்
  15. நாண்
  16. வெகுளி (கோபம்)
  17. துணிவு
  18. அழுக்காறு (பொறாமை)
  19. அன்பு
  20. எளிமை
  21. எய்த்தல் (சோர்வு)
  22. துன்பம்
  23. இன்பம்
  24. இளமை
  25. மூப்பு
  26. இகல் (பகை),
  27. வென்றி (வெற்றி)
  28. பொச்சாப்பு (பொல்லாங்கு)
  29. ஊக்கம்
  30. மறம்
  31. மதம் (வெறி)
  32. மறவி (மறதி)

அஃறிணைப் பண்புகள்

வடிவங்கள்

  1. வட்டம்
  2. இருகோணம்
  3. முக்கோணம்
  4. சதுரம் முதலிய பலவகைளும்

நாற்றங்கள்

  1. நறுநாற்றம்
  2. துர்நாற்றம்

வண்ணங்கள்

  1. வெண்மை
  2. செம்மை (சிவப்பு)
  3. கருமை
  4. பொன்மை (மஞ்சள்)
  5. பசுமை

சுவைகள்

  1. கைப்பு (கசப்பு)
  2. புளிப்பு
  3. துவர்ப்பு
  4. உவர்ப்பு
  5. கார்ப்பு (காரம்)
  6. இனிப்பு

தொடு உணர்வுகள்

  1. வெம்மை (வெப்பம்)
  2. தண்மை (குளிர்ச்சி)
  3. மென்மை, வன்மை
  4. நொய்மை (நைதல்)
  5. திண்மை
  6. இழுமெனல் (வழவழப்பு)
  7. சருச்சரை (சொரசொரப்பு)

இரண்டிற்கும் பொதுவான பண்புகள்

  1. தோன்றல்
  2. மறைதல்
  3. வளர்தல்
  4. சுருங்கல்
  5. நீங்கல்
  6. அடைதல்
  7. நடுங்கல்
  8. இசைத்தல்
  9. ஈதல்

Read more: இன எழுத்துக்கள் என்றால் என்ன

இயைபு சொற்கள் என்றால் என்ன