ஆவணி மாத சிறப்புகள்

aavani matha sirappugal

தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக வருகின்றது. சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என்கின்றன ஜோதிட நூல்கள்.

‘சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை’ என அகத்தியர் ஆவணி மாதத்தை சிறப்பித்துக் கூறியுள்ளார். ஆவணி மாத சிறப்புகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

ஆவணி மாத சிறப்புகள்

ஆவணி மாதத்தின் சிறப்பு பெயர்

சிரவண நட்சத்திரம் என்று வடமொழியில் அழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி நாள் வருவதால் இது “சிரவண மாதம்” என்றும் சிறப்பிக்கப்படுகிறது. ஆவணியானது தமிழ் சூரிய மாதத்தில் “சிங்க மாதம்” என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ஆவணியானது மாதங்களின் அரசன் என்ற சிறப்பினைப் பெறுகிறது.

ஆவணி மாத திருவோண நட்சத்திரம்

மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் தான் என்பது சிறப்பிற்குரியதாகும்.

ஆவணி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகும்

சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு ஏற்ற மாதம் ஆவணியாகும். இந்த மாதம் முழுவதும் சிவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக பக்தர்கள் தவமிருந்து தினமும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்கின்றனர். இதனால் தான் இம்மாதத்தில் கூடுதலாக பல பூஜைகளும், பிராத்தனைகளும், வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.

திருவிளையாடல் நிகழ்வுகள்

கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, தருமிக்கு பொற்கிழி, வளையல் விற்ற லீலை, புட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியை பரியாக்கியது போன்ற திருவிளையாடல் நிகழ்வுகளை மக்கள் விழாக்களாகக் கொண்டாடுகின்றனர்.

பகவான் கிருஷ்ணனின் அவதாரம்

பகவான் கிருஷ்ணன், இந்த ஆவணி மாதத்தில் அஷ்டமி நட்சத்திரத்தில் பூமியில் அவதரித்தார். கிருஷ்ணர் அஷ்டமியில் பிறந்து இந்த நட்சத்திரத்துக்கு ஒரு ஏற்றம் தந்துள்ளார்.

சதுர்த்தி தினம்

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில் தான் விநாயகர் அவதரித்தார். ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தியென வழிபடுகின்றனர். இந்நாளில் விநாயகரை வணங்கி, சந்திர தரிசனம் செய்தால் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இதில் ஆவணி மாத பூஜையும் ஒன்றாகும்.

ஆண்டின் முதல் மாதம்

கேரளாவில் ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது.

விழாக்கள்

ஆவணியில் விநாயக சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஓணம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இளையான்குடி மாறநாயனார், குலச்சிறை நாயனார், திருநீலகண்ட நாயனார், அதிபத்த நாயனார் ஆகியோர்களின் குருபூஜை விழாக்கள் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றன.

விரதங்கள்

ஆவணி மூலம், ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம், ஆவணி ஞாயிறு, புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி போன்ற வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

விரதங்களை பின்பற்றுவதன் மூலம் செல்வச் செழிப்பு, காரிய வெற்றி, புத்திக்கூர்மை, நன்மக்கட்பேறு, தொழில்வளம் ஆகியன பெருகும். உள்ள மேன்மை, உடல் ஆரோக்கியம் கிட்டும்.

You May Also Like :
ராகு கேது தோஷம் விளக்கம்
தை மாதம் சிறப்புகள்