நான் கண்ட வீதி விபத்து கட்டுரை

நான் கண்ட சாலை விபத்து கட்டுரை

இந்த பதிவில் “நான் கண்ட வீதி விபத்து கட்டுரை” பதிவை காணலாம்.

வீதியால் செல்வதற்கு பல்வேறு நிபந்தனைகளும், விதிமுறைகளும் காணப்படுகின்ற போதும் அதனை பின்பற்றாமல் விடுவதனாலேயே விபத்துக்கள் ஏற்படுகின்றது.

நான் கண்ட வீதி விபத்து கட்டுரை – 1

வீதி விபத்துக்களானவை மனிதர்களிற்கு பொருட்சேதத்தை மட்டுமல்லாது, உயிர் சேதத்தையும் ஏற்படுத்துகின்றன. வீதியால் செல்வோரின் அசமந்த போக்கும், கணநேர கவனக்குறைவும் வீதிவிபத்துக்களை உருவாக்குகின்றன.

வீதியால் செல்வதற்கு பல்வேறு நிபந்தனைகளும், விதிமுறைகளும் காணப்படுகின்ற போதும் அதனை பின்பற்றாமல் விடுவதனாலேயே இந்நிலைமை ஏற்படுகின்றது.

வீதிவிபத்துக்கள் கொடூரமானவை. அவை விரும்பத்தகாத பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன. நான் கண்ட, என் வாழ்நாளில் மறக்கமுடியாத கொடூரமான வீதி விபத்தைப் பற்றி கூறப் போகின்றேன்.

ஒருநாள் காலை வேளையில் பாடசாலை செல்வதற்காக வீதியின் ஓரத்தில் இருந்த நடைபாதை வழியாக நடந்து கொண்டிருந்தேன். காலைவேளை ஆகையினால் அந்த இடமே சனநடமாட்டங்கள் நிறைந்தாக, ஆரவாரமான மக்களின் சத்தத்தினால் நிறைந்திருந்தது.

காலை வேளையில் வேலைகளுக்கு செல்வோரும், பாடசாலை செல்லும் மாணவர்களும் வரைவாக தத்தமது இடங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். பேரூந்து மற்றும் ஏனைய வாகனங்களின் இரைச்சல்கள் அந்த இடத்தை நிறைத்திருந்தன.

திடீரென எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த பேருந்து ஒன்று, பாதசாரிகள் கடவையினால் கடந்து கொண்டிருந்த பெரியவர் ஒருவரின் மேல் மோதியது. ஒரு நிமிடம் பயத்தில் அந்த இடமே உறைந்து போனது போல் உணர்ந்தேன்.

அந்த இடம் எங்கும் மனிதர்களின் அழுகைக் குரலால் நிரம்பி வழிந்தது. வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் அந்த பெரியவரை காப்பாற்றுவதற்காக அந்த இடத்தை நோக்கி விரைவாக ஓடினார்கள்.

அவசர ஊர்தி வண்டி வரவழைக்கப்பட்டு அதில் அப்பெரியவர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பேருந்தை ஓட்டி வந்த சாரதி பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விபத்து நடந்த இடம் முழுவதும் இரத்தம் சிதறி கொடூரமாகக் காட்சி தந்தது. என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒருநாள் இதுவாகும்.

நான் கண்ட சாலை விபத்து கட்டுரை – 2

மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் வீதிவிபத்துக்களும் ஒரு அங்கமாக மாறிவிட்டன. மக்களின் விரைவான வாழ்க்கை ஓட்டத்தாலும், அக்கறையற்ற செயற்பாடுகளாலுமே விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன.

விபத்துக்களிற்கு உள்ளாகுவோர்களும் அந்த விபத்தை காண்போரும் மன உளைச்சலிற்கு உள்ளாகின்றனர். அத்தகையதொரு என் வாழ்வில் ஏற்ப்பட்ட அனுபவத்தை பகிரப் போகின்றேன்.

அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமையாகையால், நானும் எனது அம்மாவும் உறவினர் வீட்டுக் சென்று விட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நான் யன்னல் ஓரமாக அமர்ந்து மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த பேருந்துப் பயணத்தை இரசிக் கொண்டிருந்தேன்.

திடீரென பேருந்து சாரதி மிகவும் வேகமாக பேருந்தை செலுத்தத் தொடங்கினார். இன்னொரு பேருந்துடன் போட்டிபோடவே அவர் இவ்வாறு பேருந்தை ஓட்டுகின்றார் என்பதனை நாங்கள் புரிந்து கொண்டோம்.

பேருந்தில் பயணிப்பவர்கள் நடத்துனரிடம் எடுத்துக்கூறியும் அதனைக் காதில் வாங்காமல் அவர் அக்கறையற்று செயற்பட்டார். திடீரென் மிகப்பெரிய சத்தம் கேட்டது.

பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து துகள்கள் எங்களை நோக்கி வீசப்பட்டன. நடந்ததை அறிந்து கொள்ளவே சில நிமிடங்கள் ஆனது. அனைவரும் பயத்தில் உறைந்து போயிருந்தோம்.

மக்கள் முண்டியடித்துக் கொண்டு பின் வாசலால் வெளியேறத் தொடங்கினார்கள். பயத்தினால் அழத்தொடங்கிய என்னை அணைத்தவாறு அம்மா கீழே கூட்டிச்சென்றார். பேருந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதி அதன் ஒருபக்க முன்பகுதி சிதைந்திருந்தது.

முன்பக்கத்தில் இருந்த சாரதி மற்றும் நடத்துனர் இன்னும் சில பயணிகள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அந்த இடமே கண்ணாடி சிதறல்களாலும் இரத்தத்தாலும் அலங்கோலமாயிருந்தது.

அக்கறையற்று பேருந்தை செலுத்திய சாரதியை மக்கள் கடுமையாக வைதுகொண்டிருந்தனர். இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாத கொடூரமான அனுபவமாக அமைந்துவிட்டது.

You May Also Like :
எனது பொழுதுபோக்கு சிறுவர் கட்டுரை
எங்கள் ஊர் கட்டுரை