யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை

Yaadhum Oore Yaavarum Kelir Katturai In Tamil

இந்த பதிவில் “யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை” கட்டுரை பதிவை காணலாம்.

சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மக்களிடையே வலியுறுத்துவதற்காக இப்பாடல் இயற்றப்பட்டது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உயிர்களிடையே சமத்துவம்
  3. சமத்துவம் பேணல்
  4. சமத்துவத்தின் நன்மைகள்
  5. சமத்துவத்தை ஏற்படுத்தல்
  6. முடிவுரை

முன்னுரை

பல்வேறு மேடைகளிலும் பேச்சரங்குகளிலும் கணீரென முழங்கிய “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற வரிகள் கணியன் பூங்குன்றனார் என்ற புலவரால் எழுதப்பட்ட வரிகளாகும்.

சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மக்களிடையே வலியுறுத்துவதற்காக இப்பாடல் இயற்றப்பட்டது.

இந்த உலகத்திலுள்ள அனைத்து இடங்களும் ஒன்றே, அனைத்து மக்களும் எமது உறவினர்களே எனப் பொருள்படும் இந்த வரிகளை “காந்தியடிகள், அப்துல்கலாம்” போன்ற பல்வேறு அறிஞர்கள் பல்வேறு மேடைகளில் முதல் வரியாக குறிப்பிட்டுள்ளனர். இந்த கட்டுரையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை விளக்கமாக நோக்குவோம்.

உயிர்களிடையே சமத்துவம்

இவ்வுலகில் பிறப்பெடுத்த அனைத்து உயிர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டியன. இரக்கம் காட்டுதல், மரியாதை செலுத்துல், சமத்துவம் பேணல் மற்றும் உதவி செய்தல் போன்ற மனிதப் பண்புகளே மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறுபட்டவனாக உயர்ந்தவனாக மாற்றுகின்றன.

“அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது” என்பதற்கிணங்க அனைத்து பிறப்புக்களிலும் உயர்ந்த பிறப்பாக மானிடராய் பிறப்பெடுத்துள்ள அனைவரும் சமத்துவத்தை பேணி மற்றவர்களிற்கு தீங்கிளைக்காமல் வாழ்வது அவசியமாகும்.

மிக முக்கியமாக ஆறறிவு படைந்த மனிதனானவன் ஏனைய ஐந்தறிவு படைத்த உயிர்களை துன்புறுத்தாமல் வாழ்வது அவசியமாகும்.

சமத்துவம் பேணல்

நாம் வாழும் இவ்வுலகமானது பல்வேறு வகைப்பட்ட சிந்தனைகளைக் கொண்ட, பல தரப்பட்ட மத நம்பிக்கைகளை பின்பற்றுகின்ற வெவ்வேறு வகைப்பட்ட மொழிகளை தம் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பிரிவினரால் உருவமைக்கப்பட்டுள்ளது.

காலம் காலமாக சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துவத்துடனும் வாழ்ந்த மக்கள் இன்று மொழி, மதம், சாதி, ஏழை, பணக்காரன் என பல்வேறு விதமான தடைகளால் பிரிக்கப்பட்டு தனித்தனியாக வாழும் முறைமைக்கு மாற்றமடைந்துள்ளான்.

சமூகத்தில் மத மற்றும் இன வேற்றுமைகளை உருவாக்கி சக மனிதர்களையே தம்மைவிட கீழானவர்களாக கருதி ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை சுருக்கிக் கொள்ளும் மனப்பான்மை காணப்படுகின்றது.

இவ்வாறான நிலைமைகள் சமூகத்தில் களையப்பட வேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகளானவை உலக மக்களின் ஒற்றுமையை சுட்டிக் காட்டும் முகமாகவும் சமத்துவத்தை வலிறுத்தும் முகமாகவுமே படைக்கப்பட்டுள்ளன.

மதங்களானவை மனிதனை நல்வழிப்படுத்தவும் மொழிகளானவை அவனை வளப்படுத்தவுமே உருவாக்கப்பட்டுள்ளன.

“ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற கூற்றிற்கமைய அனைத்து மக்களும் தாம் மனித இனத்தை சேர்ந்தவர்கள் என்ற உயரிய மனநிலையோடும், உலகிலுள்ள அனைத்து மதங்களும் ஒருவனையே இறைவனாகக் கொண்டுள்ளன என்ற புரிந்துணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும்.

ஏழை எளியவர்களையும் வருமானத்தால் பின்தங்கியவர்களையும் அரவணைத்து உதவி புரிதல் வேண்டும். சாதி இன பேதங்களைத் தவிர்த்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.

சமத்துவத்தின் நன்மைகள்

இன்றைய உலகில் ஏதாவது ஒரு மூலையில் வெவ்வேறு நாடுகளிற்கிடையேயும், ஒரே நாட்டினுள் வசிக்கும் மக்கள் குழுக்களிற்கிடையேயும் கலவரங்கள் மற்றும் போர்கள் இடம்பெறுவதும் அவற்றினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களது உயிரையும் உடைமைகளையும் இழந்து வருவதனையும் அவதானிக்கலாம்.

இவற்றை தவிர்க்க வேண்டுமாயின் உலக மக்களிடையே சமாதானமும் சமத்துவமும் அதிகரிக்கப்பட வேண்டும். சமூகப் பல்வகைமையுடைய மக்கள் வாழ்கின்ற உலகிலே சமத்துவத்தை பேணுவதனால் மட்டுமே அமைதியை கட்டியெழுப்ப முடியும்.

இதனைத் தவிர சமத்துவம் கடைப்பிடிக்கப்படும் போது மக்களிடையே புரிந்துணர்வும், அவர்கள் வாழ்கின்ற சமூகத்திலுள்ள ஏனையவர்கள் மீதான சமூக அக்கறையும் அதிகரிக்கும். மத மற்றும் இனங்களிற்கிடையேயான நல்லுறவை உருவாக்க சமத்துவத்தை பேணுதலே முதல் அடியாகும்.

சமத்துவத்தை ஏற்படுத்தல்

மக்கள் இனமத மற்றும் பிற அம்சங்களால் வெவ்வேறாக பிரிந்து வாழ்வதே சமத்துவமின்மையாக கருதப்படுகின்றது. இது ஒருநாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியது.

சண்டைகளையும் பெரும் கலவரங்களையும் உருவாக்கக் கூடியது. மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட மனிதர்கள் அடுத்தவர்கள் மேல் தமது தனிப்பட்ட நம்பிக்கைகளை திணிக்க முற்படும் போது இவ்வாறான நிலைமைகள் தோற்றம் பெறுகின்றன.

தம்முடைய நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் அதேநேரம் ஏனையவர்களின் பெறுமதிமிக்க நம்பிக்கைளை மதிப்பதற்கு மக்கள் பழகிக் கொள்ளவேண்டும். வருமான வேறுபாடுகள் மக்களை ஏழைகள் மற்றும் பணக்காரர்கள் என இருபிரிவினராக பிரித்துள்ளது.

அந்நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமாயின் வசதிபடைத்த மக்கள் ஏழை வறியவர்களிற்கு உதவிபுரிவது மட்டுமல்லாது அரசாங்கங்கள் வருமான சமத்துவத்தை ஏற்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்தலாம்.

முடிவுரை

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகளிற்கேற்ப இந்தப் பூமிப்பரப்பு அனைத்து மக்களிற்கும் உரித்துடையது.

அனைவரும் சந்தோசமாவும், சுபீட்சமாகவும் வாழ்வதற்கு ஒவ்வொருவரினதும் நம்பிக்கைளையும் கோட்பாடுகளையும் மதித்து வாழ்வதே போதுமானது. நாம் அனைவரும் சிறுவயதிலிருந்தே சமத்துவத்துவத்தை பேணி அமைதிமிக்க நாட்டை கட்டியெழுப்புவோமாக.

You May Also Like :

தீண்டாமை ஒழிப்பு பற்றிய கட்டுரை

வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை