நான் ஒரு மிதிவண்டி கட்டுரை

Naan Oru Mithivandi

இந்த பதிவில் “நான் ஒரு மிதிவண்டி கட்டுரை” பதிவை காணலாம்.

எரிபொருள் ஏதும் இன்றி இயங்குவதனால் மிதிவண்டிகளால் சூழலுக்கு எந்த பாதிப்புக்களும் ஏற்படாது. இதனால்தான் மிதிவண்டியை சூழலின் நண்பன் என்று கூறுவார்கள்.

நான் ஒரு மிதிவண்டி கட்டுரை – 1

எல்லா குழந்தைகளுக்கும் சிறுபராயம் என்பது அழகானது அந்தபராயத்தில் பல அழகான நினைவுகள் எல்லா குழந்தைகளுக்கும் இருக்கும்.

எல்லோருக்கும் முதல் வாகனம் நான் தான் வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் என்னை அவர்கள் ஓட்டி செல்லுகையில் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே செல்வார்கள். இன்று எத்தனை வாகனங்கள் வந்து விட்டாலும் அந்த முதல் மிதி வண்டி பயணம் அவர்களது வாழ்வில் மறந்து போகாது.

ஒற்றையடி பாதையில் முன்னொருவர் பின்னொருவர் என்று அனைவரையும் சுமந்தபடி பல பயணங்களை நான் அழகாக்கியிருக்கிறேன். என்னை ஓட்ட கற்றுக்கொள்ளும் குழந்தைகளின் முயற்சி விபரிக்க முடியாது.

ஆட்டமும் ஓட்டமும், விழுவதும் காயமும் என்று அவர்களது நாள் முழுவதும் நான் அவர்களின் மட்டற்ற நினைவுகளிற்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறேன்.

முன்பெல்லாம் கடைக்கும் சந்தைக்கும் கோயிலுக்கும் மைதானத்துக்கும் ஓடி ஓடி செல்லும் பலபேரின் பயணங்களில் நான் தான் எல்லோருக்கும் வாகனமானேன்.

இன்றும் கூட ஏழைகளின் வாகனம் நான் தான் குறைந்த விலையும் எளிமையான தோற்றமும் இருப்பதனால் என்னை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

வசதி படைத்தவர்களுக்கு நோய் வந்துவிட்டால் உடற்பருமனை குறைக்க என்னை வாங்கிவிடுவார்கள். முன்பெல்லாம தபால் கடிதங்களை சுமந்துவரும் தபால்காரரின் மணி ஓசையில் நான் ஞாபகமாய் இருப்பேன்.

இன்று இந்த உலகம் வளர்ந்து விட்டது மோட்டார் வாகனங்களால் நிறைந்து விட்டது. மனிதர்கள் மிகவேகமாக மாறி விட்டார்கள் வானத்திலும் பறக்கிறார்கள் கடலிலும் மிதக்கிறார்கள். வீதிகளில் மிகவேகமாகவும் செல்கிறார்கள் இதனால் பல விபத்துக்களால் பலரும் இறக்கின்றனர்.

இன்று என்னை பெரிதாய் யாரும் கண்டுகொள்வதில்லை அந்த காலத்து மனிதர்களை நானே பாடசாலைக்கும் வேலைதளங்களுக்கும் உறவுகளிடமும் நண்பர்களிடமும் சுமந்து சென்று கொண்டிருந்தேன்.

என்னால் அவர்களுக்கு பெரிதாய் செலவுகளும் இருப்பதில்லை உடலும் ஆரோக்கியமாக இருந்தது. விபத்துக்களையும் நான் பெரிதாய் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் இன்று என்னை வீட்டுபுறங்களில் வேண்டாதவனாய் ஒதுக்கி விட்டார்கள். இருந்தாலும் இன்றும் பலர் என்னுடைய அருமை புரிந்து என்னையே வாகனமாக வைத்திருக்கிறார்கள் அவர்களை நானும் நலமாகவே வைத்திருக்கின்றேன்.

நான் ஒரு மிதிவண்டி கட்டுரை – 2

நான் ஒரு மிதிவண்டி என்னை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இன்றைய உலகம் என்னை நிறையவே தவறவிட்டிருக்கிறது. நான் எரிபொருள் ஏதும் இன்றி வேகமாக இயங்குவதனால் என்னால் இந்த சூழலுக்கு எந்த பாதிப்புக்களும் ஏற்படாது.

இன்று மனிதர்கள் மோட்டார் வாகனங்களை பாவிக்கின்றனர் இதனால் அதிக வளி மாசடைதல் ஏற்படுகின்றதாகவும் சூழல் வெப்பநிலை அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இன்று தான் மனிதர்கள் எனது அருமையை சிறிது சிறிதாக புரிந்துகொள்கின்றனர்.

நேரத்தை மிச்சப்படுத்துகின்றோம் என்ற பெயரில் வேகமாக சென்று விபத்துக்களில் உயிரை இழக்கும் நிலைஎன்னால் ஏற்படாது. உலகின் சிறந்த நாடுகள் இன்று என்னை அதிகம் பயன்படுத்துகின்றன.

இன்றயை குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறாமல் இணையத்திலும் கணினிகளிலும் தொலைபேசிகளிலும் மூழ்கி கிடப்பதனால் அவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி மனச்சிதைவடைவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சிறுவர்கள் என்னை எடுத்து கொண்டு வெளியில் சென்று மைதானங்களில் விளையாடிய முன்னைய நாட்களில் அவர்கள் உடல்உள ஆரோக்கியத்துடன் வளர்ந்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே.

சிறுவர்கள் மட்டுமன்றி எல்லா வயதுடையவர்களும் என்னை பயன்படுத்தினால் நலமாக வாழமுடியும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதிக பணத்தை செலவு செய்து நோய்களையும் வாங்கி கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். ஆகவே நீங்கள் சிந்தித்து செயலாற்றுங்கள் நமது குழந்தைகளுக்கும் நல்ல விடயங்களை சொல்லி கொடுங்கள்.

நவநாகரீகம் என்ற பெயரில் வேகமாக மாறி செல்கின்ற மனிதர்கள் இன்று அதனுடைய பாதகத்தை அறிகின்றனர். என்றேனும் ஒருநாள் நிச்சயமாக என்னை அனைவரும் தேடுவார்கள் என நம்புகின்றேன்.

கற்பனை செய்துபாருங்கள் வீதிகளையும் இயற்கையையும் சீர்குலைக்கும் இந்த பாரிய இரைச்சல் நிறைந்த வாகனங்கள் இல்லாது என்னை பயன்படுத்தினால் இந்த நாடுகள் எவ்வளவு அழகாகவும் அமைதியாகவும் இருக்கும்.

முன்பிருந்தது போல் மனித மனங்களும் இந்த சூழலும் மிக அழகானதாக மாறி விடும் என்று நான் நினைக்கின்றேன்.

You May Also Like :

நான் கண்ட கனவு கட்டுரை

நான் ஒரு கைக்கடிகாரம் கட்டுரை