திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு

Tipu Sultan History In Tamil

திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு

இந்த பதிவில் “திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.

ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் இந்தியாவை ஆண்ட சிறந்த மன்னர்களில் ஒருவராக திகழ்கின்றார்.

திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு

அறிமுகம்

இந்திய தேசியத்தை அடக்கி ஆண்ட ஆங்கிலேயருக்கு அடங்க மறுத்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மைசூர் மன்னர் திப்பு சுல்தான்.

மரணம் தன்னை மார்போடு அணைத்துக் கொள்ளும் நேரத்திலும் மண்டியிடாமல் ஆடுகளைப் போல் 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலிகளைப் போல் இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம் என கர்ஜித்த மாவீரனாவார்.

18ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயருக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தவர் சுல்தான் ஆவார். அதன் காரணமாக கிழக்கிந்திய வர்த்தக கம்பனியின் “குலை நடுக்கம்” என லண்டன் பத்திரிகையில் வர்ணிக்கப்பட்டவர்.

பெயர் திப்பு சுல்தான் (Tipu Sultan)
பிறந்த திகதி 1750 நவம்பர் 20
பிறந்த இடம் தேவனஹள்ளி
தாய் பெயர் பாக்ர்-உன்-நிசா
தந்தை பெயர் ஹைதர் அலி
ஆட்சிக் காலம் 1782–1799
இறப்பு 1799 மே 4, ஸ்ரீரங்கப்பட்டினத்தில்

பிறப்பு

திப்புசுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி தேவனஹள்ளி என்னும் இடத்தில் பிறந்தார். “திப்பு” என்ற அரேபியச் சொல்லுக்கு புலி என்று பொருள். திப்பு சுல்தானின் தந்தை பெயர் ஹதர்அலி தாயார் பெயர் பாக்ர்-உன்-நிசா ஆகும்.

இவரது தந்தை கல்வி கற்காததானால் தனது மகனுக்கு ஆசிரியர்களை நியமித்து உருது⸴ கன்னடம்⸴ அரபி மொழிகளும் குதிரையேற்றம்⸴ போர்ப் பயிற்சி வாழ்வீச்சு⸴ துப்பாக்கி சுடுதல்⸴ இஸ்லாமிய நீதி முதலானவற்றில் பயிற்சி வழங்கப்பட்டது.

அதில் நன்கு தேர்ச்சியும் பெற்றார். திப்புசுல்தான் தனது 15வது வயது முதல் போர்க்களங்களைப் பார்க்க ஆரம்பித்தார். 17-ஆவது வயதில் இருந்து அரசியல்⸴ போர் நடவடிக்கைகளில் தலைமை ஏற்றும் நடத்தினார்.

திப்பு சுல்தானின் ஆட்சிமுறை

தனது தந்தை இறந்ததும் மன்னர் அரியனையில் திப்பு சுல்தான் அமர்ந்தார். தனது தந்தை போலவே சிறப்பான ஆட்சியாளன் என்பதை நிரூபித்தும் காட்டினார். அவருடைய ஆட்சிக் காலத்தில் மிகப் பெரும் இராணுவப் படையை வைத்திருந்தார்.

குதிரைப்படை⸴ ஒட்டகப் படைகளும் இருந்தன. ஆங்கிலேயருக்கு நிகரான நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். திப்பு சுல்தான் கடற் பயிற்சிகளுக்கென பயிற்சிப் பள்ளி உருவாக்கப்பட்டு கடற் படையணிகளில் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன.

இவரது 26வது வயதில் 1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு எதிராகப் போர் புரிந்து காலிக்கோட்டையைக் கைப்பற்றினார்.

இவரது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்பட்டது. இவர் தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தவர். முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதுடன் கோவில்களில் நரபலி கொடுப்பதையும் தவிர்த்தார்.

இஸ்லாமியராக இருந்தபோதிலும் நாட்டில் வாழும் இந்துக்களும்⸴ பிற மதத்தவர்களும் சுதந்திரமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தினார். இவர் மத ஒற்றுமையை இறுதிவரை கடைபிடித்தவராவர். சட்டப்படி ஆட்சியும்⸴ சட்டப்படி விசாரணைகளும்⸴ தண்டனைகளும் வழங்கப்பட்டன.

இவர் தனது ஆட்சிக் காலத்தில் விவசாயம் உட்பட பல தொழில்களிலும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

தனது கொள்கைகளாலும்⸴ நடைமுறை ஆட்சிகளாலும் தனது தனிப்பட்ட வாழ்வாலும் மக்கள் நலன்சார் கொள்கைகளையே நடைமுறைப்படுத்தினார். இவரது ஆட்சிக்காலம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வீர வரலாறு படைத்தது என்றால் அது மிகையல்ல.

இரண்டாம் மைசூர் போரும் ராக்கெட் படையும்

ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் இணைந்து ஆங்கிலேயரைத் திணறடித்தனர். கொல்லியூரில் கர்னல் வில்லியம் படைகளை எதிர்கொண்டனர். ஆங்கிலேயப் படையை விட திப்பு சுல்தான் படைகள் எண்ணிக்கையில் குறைவு. ஆனாலும் திப்பு சுல்தான் வீரர்கள் ஆங்கிலேய படைகளை திணறடித்தனர்.

பின்வாங்கிய பெயிலி மெட்ராசிலிருந்தும்⸴ பாண்டிச்சேரியிலிருந்தும் படைகளை வரவழைத்துக் கொண்டார். வேரம்பாக்கத்தில் வைத்து அந்தப் படைகளை எதிர்கொண்ட திப்புசுல்தான் ஒட்டுமொத்த ஆங்கிலேய படைகளையும் நிர்மூலமாக்கினார். கிழக்கிந்திய கம்பனியின் சரித்திரத்தில் நடந்த பெரும் தோல்வியாக இது இருந்தது.

ஆங்கிலேயர் மிகவும் வியந்த விடயம் திப்பு சுல்தானின் ராக்கெட் படைகளாகும். ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்குகளைத் துல்லியமாக தாக்கியழித்தன. பெயிலியுடன் சேர்ந்து 2000 ஆங்கிலேயப் படைகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

முக்கிய படைத்தளபதி மெட்ராசுக்கு தப்பியோடினார். திப்புசுல்தானின் ராக்கெட்டுகள் தான் பிற்காலத்தில் பிரிட்டன் ராணுவத்தில் பங்காற்றிய முக்கிய காங்கிரோ ராக்கெட்டிற்கு அடிப்படைகளாகின.

இரண்டாம் மைசூர் போர் நிகழ்ந்து கொண்டிருந்த போதே ஹைதர் அலி புற்றுநோய் காரணமாக இறந்தார். இதனால் திப்பு சுல்தானை எளிதில் வீழ்த்தி விடலாம் என ஆங்கிலேயர்கள் நினைத்தனர். ஆனால் அதைத் திப்பு சுல்தான் பொய்யாக்கினார்.

1882ஆம் ஆண்டு மன்னராக முடிசூட்டிக் கொண்டு போரை தொடர்ந்து நடத்தினார். ஐரோப்பாவில் பிரிட்டனுக்கும்⸴ பிரான்சுக்கும் இடையிலான போர் ஒரு முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் அரசாக இருந்த பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துகொண்டார்.

பிரான்ஸ் தான் திப்புசுல்தானுக்கு உதவியாக அனுப்பிய படைகளைத் திரும்பிப் பெற்றுக்கொண்டது. திப்பு சுல்தான் படைகளால் அதிக சேதங்களை சந்தித்திருந்த ஆங்கிலேயேப் படையும் போரை நிறுத்தும் முடிவுக்கு வந்திருந்தது.

1784 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி கையெழுத்தான மங்களூர் உடன்படிக்கை இரண்டாம் மைசூர் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.

நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் மரணமும்

போரில் திப்பு சுல்தானை வீழ்த்த முடியாது என்ற உண்மையை ஆங்கிலேயப் படை நன்கு அறிந்திருந்தது. இதனால் சூழ்ச்சி செய்து அழிக்கத் திட்டமிட்டனர். எந்த ஒரு வீர சரித்திரமும் துரோகமின்றி முழுமை பெறாது.

திப்புசுல்தானின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருந்த அவரது அமைச்சர்கள் பூர்மையா⸴ மீர் சாதிக் ஆகியோர் துரோகிகளாக மாறினர். ஸ்ரீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன.

தன்னுடைய வீரர்கள் பதினோராயிரம் பேர்களோடு ஆங்கிலப் படையை எதிர்த்து நின்றார் திப்புசுல்தான். உலக சரித்திரம் ரத்தத்தால் எழுதப்பட்ட பல்வேறு தினங்களால் நிறைந்துள்ளது. 1799 ஆம் ஆண்டு மே நான்காம் நாளில் இந்திய வரலாறு திப்புசுல்தானின் வரலாறு எழுதப்பட்டது.

ஸ்ரீரங்கப்பட்டினம் இறுதிப்போர்க் களத்தில் மன்னனுக்கான சிறப்பு ஆடைகளோ⸴ கவசங்களோ இல்லாமல் போரிட்டு மடிந்திருந்தார் திப்பு சுல்தான். ஆனால் இந்த மாவீரனின் பெயர் இந்திய தேசம் உள்ளவரை வரலாற்றில் நிலைக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

You May Also Like :

மணிமேகலை வாழ்க்கை வரலாறு

ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு