ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை

5 siru kappiyangal in tamil

தமிழ் இலக்கிய வரலாற்றில் காலம் தோறும் சிறந்த இலக்கியங்கள் தோன்றி நம் தாய் மொழியை வளமாக்கின. எட்டுத்தொகை, பத்துப்பாட்டுக்கு அப்பால் அடுத்ததாக முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுள்கள் உருவாயின.

அவை காப்பியங்கள் என அழைக்கப்பட்டன. அத்தோடு இவை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் எனவும் பகுக்கப்பட்டன.

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகை உறுதிப் பொருட்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும். ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்களாகும். ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை

  1. நாககுமார காவியம்
  2. உதயகுமார காவியம்
  3. யசோதர காவியம்
  4. நீலகேசி
  5. சூளாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள் ஆசிரியர் பெயர்கள்

நாககுமார காவியம்தெரியவில்லை
உதயகுமார காவியம்தெரியவில்லை
யசோதர காவியம்வென்நாவலுடையர் வேல்
நீலகேசிதெரியவில்லை
சூளாமணிதோலாமொழித்தேவர்

ஐஞ்சிறு காப்பியங்கள் விளக்குக

சூளாமணி

இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர் ஆவார். கி.பி.10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. சூளாமணி காப்பியம் 12 சருக்கங்களில், 2131 விருத்தப்பாக்களால் எழுதப்பட்டுள்ளது. இது சிறுகாப்பிய நூலாக இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகளை மிகுதியாகக் கொண்டுள்ளது.

சூளாமணி என்பதற்கு நச்சினார்க்கினியர் முடியின் மணி என்றும், நாயக மணி என்றும் பொருள் ஆகின்றது. காப்பியக் கதை பயாபதி மன்னன் ஆட்சியோடு தொடங்கி, அவன் முக்தி மகளை மணந்து, உயர்ந்து, உலகின் முடிக்கோர் சூளாமணியானான் என்று முடிகிறது.

நீலகேசி

இக்காப்பியமானது கி.பி 10 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தது. நீலகேசி என்பது ‘கேசி’ என்று முடியும் பெண்பால் பெயர்களுள் ஒன்று. கேசி அழகிய கூந்தலை உடையவள், நீலகேசி அழகிய கருங்கூந்தலை உடையவள் என்பது பொருள்.

10 சருக்கங்களில் 894 பாடல்களைக் கொண்டது. இவை விருத்தப்பாக்களில் அமைந்தவை. இந்நூல் பல சமயத் தத்துவங்களின் உண்மைத் தன்மையை விவாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது குண்டலகேசி எனும் பௌத்தக் காவியத்துக்கு எதிரான சமணக் காப்பியமாகும்.

உதயண குமார காவியம்

இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் பாடப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது. உதயன குமார காவியம் 369 பாடல்களைக் கொண்டது. கி.பி.15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.

இதனை உதயணன் கதை என்றும் கூறுவர். இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. அவையாவன உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம் என்பனவாகும்.

யசோதர காவியம்

தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலானது 5 சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களாலானது.

இதன் ஆசிரியர் “வென்நாவலுடையர் வேல்” ஆவார். மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்ற கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. யசோதர காவியம் காஞ்சிபுரம் பாகுபலி நயினார் என்பவரால் முதன்முதலாக அச்சிடப்பட்டு வெளிவந்தது.

நாககுமார காவியம்

இந்நூல் நாகபஞ்சமி கதை எனப்படும். 170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர் பற்றி தெரியவில்லை. ஆயினும் கதைப் போக்கிலிருந்து, இது ஒரு சமண முனிவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.

இக்கதை நாயகன் 519 பெண்களைத் திருமணம் செய்கின்றான். இக்காப்பியமானது முழுக்க முழுக்க திருமணத்தையும், போகத்தையும் மட்டுமே கூறியுள்ளது.

You May Also Like :
ஐம்பெரும் காப்பியங்கள் கட்டுரை
இரட்டை காப்பியங்கள் கட்டுரை