உண்மையே உயர்வு தரும் கட்டுரை

Unmai Uyarvu Tharum Katturai In Tamil

இந்த பதிவில் வாழ்வை மேன்மையாக்கும் “உண்மையே உயர்வு தரும் கட்டுரை” பதிவை காணலாம்.

இன்று உண்மை உயர்வு தரும் என்று நினைப்பவர்களை உதாசீனம் செய்யும் அளவிற்கு இந்த சமூகம் மாறிவிட்டது.

உண்மையே உயர்வு தரும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உண்மை எனப்படுவது
  3. உயர்வின் ரகசியம்
  4. பொய்மை கேடு தரும்
  5. உலகில் உயர்ந்தவர்கள்
  6. முடிவுரை

முன்னுரை

வாய்மையே வெல்லும்” என்ற வாசகத்தினை நாம் எல்லா இடங்களிலும் காண முடியும். எம் வாழ்வில் நாம் முன்னேற வேண்டுமாயின் நாம் உண்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது எம் ஆன்றோரின் கருத்தாகும்.

மனிதனிடத்து காணப்பட வேண்டிய மிகவும் அடிப்படையான நற்குணங்களில் உண்மை முதன்மையானதாகும்.

வாழ்வில் மேன்மை அடைந்த மனிதர்கள் நிச்சயமாக உண்மை எனும் ஒழுக்கத்தை கடைப்பிடித்தவர்களாக இருப்பார்கள் இக்கட்டுரையில் உண்மையின் உயர்வு பற்றி காண்போம்.

உண்மை எனப்படுவது

உண்மை எனப்படுவது யாது? நாம் மற்றவர்களோடு பேசுகின்ற போது பொய் உரைக்காது உள்ளதை உள்ள படி பேசுவது.

அதுமட்டுமன்றி நாம் பழகுகின்ற மனிதர்கள், எமது குடும்பத்தவர்கள், சக மனிதர்கள் என்று அனைவரிடத்தும் நல்ல மனிதனாக பிறரை வஞ்சிக்காது நேர்மையாக நடந்து கொள்வதனையும் குறிக்கின்றது.

ஒருவர் நமக்கு உதவி செய்தால் செய்நன்றி மறவாமல் இருத்ததல். மற்றும் அவர்கட்கு பிரதி உபகாரம் செய்தல் இவை போன்ற இயல்புகள் வாய்க்க பெற்ற மனிதர்களை உண்மையான மனிதர்கள் என்று கூற முடியும்.

உயர்வின் ரகசியம்

வாழ்விலே நாம் உயர்ந்த நிலையை அடைந்து கொள்ள வேண்டும் என்று கனவு காண்கின்ற ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் என்னவென்றால் உண்மை தன்மையுடன் விடாமுயற்சியும் சேர்ந்தால் எமது வெற்றி என்பது நிச்சயமாக ஒரு நாள் கிடைத்தே தீரும் என்பதுவாகும்.

இதற்கு சான்றாக பலரது வாழ்க்கை வரலாறுகளை புரட்டி பார்க்க முடியும். நாம் செய்கின்ற தொழிலின் மீது நம்பிக்கையும் விருப்பமும் இருந்தால் அது நிச்சயமாக எம்மை பெரிய உயரத்துக்கு அழைத்து செல்லும் என்பதில் துளியும் ஐயமில்லை.

பொய்மை கேடு தரும்

இன்று உண்மை உயர்வு தரும் என்று நினைப்பவர்களை உதாசீனம் செய்யும் அளவிற்கு இந்த சமூகம் மாறிவிட்டது. பொய் பேசி பிறரை ஏமாற்றி அதன் மூலமாகவே பலரும் இன்று முன்னேறுகின்றனர், இலாபம் சம்பாதிக்கின்றனர், உயர்ந்த பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

இதுவே இன்றைய நிகழ்கால நிதர்சனம் இருப்பினும் இவை நிச்சயமாக பின்னாளில் பெரும் துன்பத்தை தரவல்லன.

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று கூறுவார்கள் அதற்கிணங்க உண்மையே எம்மை வாழ்விக்கும். ஆதலால் உண்மை உள்ளவர்களாய் வாழ்வோம்.

உலகில் உயர்ந்தவர்கள்

இன்றளவும் உலகத்தில் அனைவராலும் போற்றப்படுகின்ற உயர்ந்த நிலைகளை அடைந்தவர்கள். உண்மையை பின்பற்றியவர்களாவர்.

சுயநலம் இன்றி கடினமாக உழைத்தவர்கள் அவர்கள் நேர்மையாலும் உண்மையாலும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர்.

இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி வாய்மையின் வழிநின்றவர். இதனால் தான் அவரால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.

அதுபோல கர்மவீரர் காமராஜர் மிகச்சிறந்த நேர்மையான மனிதராக இன்றும் மக்களால் போற்றப்படுகின்றார். இவ்வாறு இங்கே பல உதாரணமான மனிதர்களை நாம் காண முடியும்.

முடிவுரை

இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும். எமது நாடு, எமது மக்கள் அனைவரும் சிறப்பாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என எதிர்பார்க்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் தமக்குள்ளே ஒரு கேள்வியை எழுப்ப முடியும்.

நான் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கின்றேனா? அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால் இந்த உலகம் நாம் நினைப்பது போல அழகாய் இருக்கும்.

எனவே பிறரை பற்றி கவலைப்படாமல் நாம் உண்மையுள்ளவர்களாக வாழ்வோம்.

You May Also Like :
நேர்மை பற்றிய கட்டுரை
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை