பரோல் என்றால் என்ன

parole endral enna

பரோல் என்றால் என்ன

பரோல் என்பது சிறைவாச விடுமுறை என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த தற்காலிக சிறை விடுவிப்பு (பரோல்) நாட்கள், மொத்த சிறைத்தண்டனை காலத்திலிருந்து கழிக்கப்படாது.

ஆனால் பரோல் விடுவிப்பு காலத்திற்கு சிறைதண்டனை காலம் நீளும். வரலாற்று அடிப்படையில், பரோல் என்பது இராணுவச் சட்டத்திற்கு உரியதாகும்.

இராணுவத்தில் போர்க்கைதி (War Prisoner) திரும்ப வருவதற்கு உறுதியளித்ததன் பேரில் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

‘பரோல்’ என்பது இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குற்றவியல் நீதிமுறையிலுள்ள ஒரு சொல்வழக்காகும். குற்றம் மற்றும் குற்றவாளிகளின் மீதுள்ள சமூகத்தின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக பரோல் முறை அந்த நாடுகளில் கொண்டுவரப்பட்டது.

பரோல் முறைமையின் நவீனத்துவ சிந்தனையானது 1840இல் அலெக்ஸாண்டர் மாகோனொச் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் பரோல் முறைமையில் மூன்று படிநிலைகளை ஆராய்ந்தார். அவையாவன,

  • ஒருவரின் நன்னடத்தைக்காக விடுமுறை
  • தொழில் மற்றும் கல்விக்காக விடுமுறை
  • நிபந்தனைகளுடனான விடுமுறை

குற்றவாளிகள் கடைசிவரை குற்றவாளிகளாகவே இருப்பார்கள் என்பது தவறான கருத்து. அவர்கள் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பாகவே பரோல் வழங்கப்படுகிறது. கைதி தன்னை திருத்திக் கொண்டு பயனுள்ள குடிமகனாகுவதற்கு பரோல் மூலம் கைதிக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

பரோல், கைதிக்கு பகுதியளவு சுதந்திரத்தை அளிக்கிறது அல்லது கைதிக்கு வரையரைகளைக் கற்பிக்கிறது. ஆனால், அவர் பரோலில் விடுவிக்கப்படுவதால், கைதி என்ற தகுதியினின்று மாறுபடமாட்டார்.

உயர்நீதிமன்றங்களோ, உச்சநீதிமன்றமோ காவலில் வைக்கப்பட்டவரை பரோலில் விடுவிக்கக் கூடாது. ஆனால், நீண்டகால தண்டனையைப் பெற்ற கைதி ஒரு பகுதியளவு தண்டனையை அனுபவித்திருக்கும் போது மட்டுமே வழங்கப்படுகிறது.

பரோல் என்றால் என்ன

பரோல் என்பது சிறைத் தண்டனைக் காலம் முடியும் முன்னரே நன்னடத்தையின் காரணமாக ஒருவர் குறிப்பிட்ட காரணத்துக்காக சிறைச்சாலையிலிருந்து வெளியேற அனுமதிக்கும் தற்காலிக விடுப்பாகும்.

அதாவது சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவரை இடையில் நிபந்தனையின் பேரில் தற்காலிகமாக விடுவித்தல் ‘பரோல்’ எனப்படும்.

இந்தியாவில் பரோல் வழங்கும் முறைமை

இந்தியாவின் சட்ட ஏற்பாடுகளை நோக்குகின்ற போது, பரோல் வழங்குவது தொடர்பில் நியதிச்சட்ட ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. அது மட்டுமன்றி, குற்றவியல் நடபடிமுறைக் கோவையிலும் எந்த நடைமுறையும் காணப்படவில்லை.

ஆயினும், நிர்வாக அடிப்படையிலான தீர்மானத்தின் அடிப்படையில் பரோல் வழங்கப்படுவதற்கான ஏற்பாட்டை சில மாநிலங்கள் கொண்டுள்ளன.

2000ஆம் ஆண்டின் டெல்லி சிறைச்சாலை சட்டத்தின் பிரிவு 2(P) இன்படி, பரோலில் விடுவித்தல் என்பது ஒரு கைதியை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சிறைச்சாலையில் இருந்து வெளியே செல்ல அனுமதித்தல் ஆகும்.

குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவுகள், பரோல் தொடர்பில் ஆராயாமல் இருப்பினும், வழக்குகளின் தீர்ப்புச் சட்டங்களில் பரோல் பற்றிய வியாக்கியானங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில் கட்டுக்காவலுடனான பரோல், கிரம முறையான பரோல் என இரண்டு முறையான பரோல் முறைகள் காணப்படுகின்றன.

கட்டுக்காவலுடனான பரோல் என்பது கைதியின் குடும்ப அங்கத்தவர்களின் இறப்பு, திருமணம், பாரதூரமான நோய் நிலைமை, அவசர அவசிய நிலைமை போன்ற காரணங்களின் நிமித்தம் வழங்கப்படலாம்.

கிரம முறையான பரோல் என்பது பரோல் விண்ணப்பத்தின் பேரில் கைதியானவர் விடுவிக்கப்படலாம்.

Read more: கடுங்காவல் தண்டனை என்றால் என்ன

ஆயுள் தண்டனை என்றால் என்ன