தரம் பற்றிய கட்டுரை

Tharam Katturai In Tamil

இந்த பதிவில் “தரம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

வாழ்க்கை தரம் என்பது அனைவராலும் விரும்பத்தக்கது உயர்ந்த வாழ்க்கை தரம் வேண்டும் என்றால் அனைத்து துறைகளும் தரமானதாக இருக்க வேண்டும்.

தரம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தரம் என்றால் என்ன
  3. தரமான கல்வி
  4. வியாபாரத்தில் தரம்
  5. தரமான மருத்துவம்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய நவீன உலகில் தரம் என்பது முக்கியமானதாகும். எத்துறை ஆயினும் எந்தச் செயல் ஆயினும் தரம் அவசியமாகும்.

தரமான வாழ்க்கை⸴ தரமான கல்வி⸴ தரமான பொருட்கள்⸴ தரமான மருத்துவம் என அனைத்திலும் தரமே முதன்மைப்படுத்தி பார்க்கப்படுகின்றது. ஏனெனில் தரம் பெறுமதி மிக்கது⸴ பயனுடையதாகும். தரம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தரம் என்றால் என்ன

பொதுவாகத் தரம் என்பது குறைவற்ற தன்மை என கூறலாம். குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான தகுதி எனலாம்.

தரம் என்பது ஓர் அனுபவம். அறிவியல் பூர்வமாக இரண்டு அர்த்தங்களைக் கொள்ளலாம். குறிப்பிட்ட அல்லது எதிர்பார்க்கப்படும் சேவையைப் பூர்த்தி செய்யும் திறன் மற்றும் குறைவற்ற தன்மை எனலாம்.

தரமான கல்வி

கல்வி ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும்⸴ வளர்ச்சிக்கும் முதன்மை ஆகும். ஒரு நாட்டில் வாழும் மக்களின் அறிவாற்றல் கல்வியை முதன்மைப்படுத்தியே பார்க்கப்படுகின்றது. இத்தகைய கல்வியானது தரமானதாகவும் பயனுள்ளதாகவும் மாணவர்களுக்கு வழங்கப்படும் போது தான் சிறந்த அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்.

பொதுவாகச் சமூகத்தில் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தரம் கூடியதாகப் பார்க்கப்படுகின்றது. இதன் காரணம் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வித்திறன் செயற்பாடுகளை உயர்த்தியமையே ஆகும்.

இந் நிலை நீங்கி அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படும் போது சிறந்த கல்வியினை அனைவராலும் பெற முடியும்.

வியாபாரத்தில் தரம்

இன்று தரமான பொருட்கள் என்பது மிகமிகக் குறைவாகவே உள்ளது. கலப்படங்களே அதிகம் காணப்படுகின்றது. இதன் காரணமாக வியாபாரம் தரமற்றதாகின்றது. உற்பத்தியையும் வியாபாரத்தையும் பெருக்கிக் கொள்ள உதவுவது பொருட்களின் தரம் மட்டுமே.

தரமான பொருட்களை விற்பனை செய்யும் போது தான் வியாபாரம் சிறக்கும். பொருளின் பாவனையை அதிகரிக்க தரமே முக்கியமாகின்றது. தரம் மிக்க பொருட்களையே மக்கள் வாங்கிப் பயன்படுத்த விரும்புவர். தரமான பொருட்களே நீண்ட பாவனையைக் கொடுக்கும்.

தரமான மருத்துவம்

உயிர்காக்கும் துறையே மருத்துவத் துறையாகும். இத்தகைய உன்னத துறையினால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள்⸴ மருந்துகள் தரமானதாக இருக்க வேண்டும்.

இன்று நம் நாட்டில் போலி மருத்துவர்கள்⸴ காலாவதியான மாத்திரைகள்⸴ மருந்துகள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் மருத்துவத்துறையின் தரம் கேள்விக்குள்ளாகின்றது.

தரமான மருத்துவத்தை வழங்கும் போது தான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும். சுகாதார சீர்கேடுகள்⸴ நாட்டின் இறப்பு விகிதம் குறையும்.

முடிவுரை

வாழ்க்கையின் தரம் என்பது மிகவும் முக்கியமாகும். நாட்டின் முன்னேற்றமானது தரமான சமூகம் கல்வி⸴ மருத்துவம்⸴ உற்பத்தி போன்றவற்றிலேயே தங்கியுள்ளது. எனவே எல்லா துறைகளிலும் சிறப்பாக செயற்படும் போது தான் நாட்டை முன்னேற்றம் அடையச் செய்யலாம்.

அதுமட்டுமன்றி தனிமனிதன் ஒவ்வொருவரும் தனது தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்வில் வளம்பெற முடியும்.

எனவே நம் தரத்தினை உயர்த்திக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வாழ்வில் வளம் பெறுவோமாக.

You May Also Like :

காற்று மாசுபாடு பற்றி கட்டுரை

தூய்மை பற்றிய கட்டுரை