சுகவீனம் என்றால் என்ன

sugaveenam in tamil

சுகவீனம் காரணமாக அலுவலக வேலை சோர்வு, அடிக்கடி ஏற்படும் நோய்கள் உடலை வெகுவாகக் கெடுக்கின்றன.

அதே நேரத்தில் ஒரு நபர் தொடர் தூக்கம், சோம்பல் மற்றும் மோசமான ஆரோக்கியத்தை உணர்கின்றார் என்றால் அவர் சுகவீனமாய் இருக்கின்றார் என்று அர்த்தம் ஆகும். இந்த அறிகுறிகள் அனைத்தும் பொதுவான உடல்நலக்குறைவைக் குறிக்கின்றன.

சுகவீனம் என்றால் என்ன

சுகவீனம் என்பது தொற்றுநோயோ அல்லது தொற்றாத நோயோ ஏதேனும் ஒரு நோயின் காரணமாக ஏற்படும் உடல்நல குறைவு அல்லது உடற்சோர்வு ஆகும்.

அதாவது, சுகவீனம் என்பது ஒருவரது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நலனில் தீங்கான தாக்கத்தை ஏற்படுத்தும் மருத்துவ, உளவியல் அல்லது உணர்ச்சிப் பிரச்சனைகள் ஆகும்.

சுருக்கமாக கூறுவதெனில் ஒருவர் சாதாரணமாக மற்றும் இயல்பாக செயல்பட முடியாத நிலை ஆகும்.

இன்றைய உணவுப் பழக்கவழக்கமும் உடல்நலக்குறைவும்

உலகளவில் 22 ஆயிரம் வகையான நோய்கள் உள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் 84 லட்சம் உயிரினங்கள் உள்ளன. ஆனாலும் மனிதனுக்கே அடிக்கடி சுகவீனம் ஏற்படுகின்றது.

ஆடம்பரமான விளம்பரங்கள் ஊடாக மக்களை கவர்ந்து விலை அதிகமான ஆற்றல் அதிகம் தரும் உணவு, கொழுப்பு அதிகம் நிறைந்த உணவு, சாதாரண மாவுச்சத்து மற்றும் குறைந்த அளவு நார்ச்சத்து மற்றும் இதர கனிமச்சத்துகள் குறைந்த அளவு மட்டுமே தரும் உணவுப் பொருட்களை உண்ண வைக்கின்றனர்.

இது தவிர இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவை உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் காட்சிப் பிழைகளான விளம்பரங்களை நம்பி அதனால் ஈர்க்கப்பட்டு வசதி குறைந்த குடும்பத் தலைவிகளும் அதிக பணத்தைச் செலவழித்து கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு அளிக்கின்றனர்.

பலவகைப் பாணங்களும் பிஸ்கட் வகைகளும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

நாகரீகம் என்ற பெயரில் நாம் பல வகையான உணவுகளை உண்கின்றோம். உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் பொருளாதார மாறுதல்களால் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறியுள்ளன.

வீட்டில் வறுத்து, இடித்து, அரைத்து உண்ணும் பழக்கம் வெகுவதாகக் குறைந்துவிட்டது. வீதியோரங்களில் உள்ள கடைகளில் உண்ணும் பழக்கம் வெகுவாக அதிகரித்துள்ளமையைக் காண முடிகின்றது. இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றன மற்றும் உடற்பருமனும் அதிகரிக்கின்றது.

இளம் வயதினர் தொடர்ந்து துரித உணவுகளை விரும்பி உண்பதனை இன்று அதிகம் காணமுடிகின்றது. இதனால் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.

இதுமட்டுமன்றி குழந்தைகளுக்கு இரண்டாம் தர நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் இந்த துரித உணவுகள் காரணமாக உள்ளன. பெண்களுக்கு எலும்பு நோய், இரத்தச் சோகை போன்ற நோய்களும் இவ்வுணவு வகைகளால் ஏற்படுகின்றன.

இத்தகைய நோய்கள் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு நம் வாழ்க்கையை சீர்குலைக்கலாம்.

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த உணவுமுறைகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு சிறிது மாற்றங்களைச் செய்து கடைப்பிடித்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்தோடு ஆரோக்கியமான வாழ்க்கையையும் வாழ முடியும்.

ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் சமூக ஆதரவு ஆகியவை ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஏற்படுத்தும்.

Read more: உடற்கல்வி என்றால் என்ன

இரத்த அழுத்தம் என்றால் என்ன