“எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என வள்ளுவப் பெருந்தகை தனது குறட்பாவின் மூலம் எடுத்தியம்புகின்றார். அதாவது புதுப்புது தகவல்களை அறிந்து கொண்டால் மட்டும் போதாது, அறிந்து கொண்ட தகவல்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து கேட்பவர்களே அறிவில் சிறந்தவர்களாக விளங்குவர்.
நமது அறிதலுக்கு ஏற்ப நமது செயல்பாடுகள் அமைகின்றன. நமது அறிதலில் குறை இருப்பின் நமது செயல்பாடு தடைபடும். அதாவது, நமது அறிதல் சரியாக இருந்தால், அந்த செயலில் வெற்றியும், தவறாக இருந்தால் தோல்வியும் ஏற்படுகிறது.
அறிவு என்பது ஒருவருக்கு பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன. ஆனால் படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக எல்லோரிடமும் காணப்படுகின்றன. அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது விலங்குகள் உட்பட எல்லோருக்கும் உண்டு.
Table of Contents
அறிவு என்றால் என்ன
அறிவு என்பதற்குப் பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. அறிவு என்பதனைப் பல்துறை சார்ந்தவர்களும் பலவாறு விளக்கம் கூறுவர்.
ஆன்மீகவாதிகளோ அறிவை- பேரறிவு, சிற்றறிவு, என அறிவுக்கு விளக்கம் கொடுக்கின்றனர். தத்துவவாதிகளோ அறிவை ஐந்தறிவு, ஆறறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு என்று வேறுபடுத்துகின்றனர். அறிவியல் அறிஞர்கள் புதிய கண்டுபிடிப்பே அறிவு என்கின்றனர்.
“தனக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பதனை அறிந்து வைத்திருப்பதே அறிவு”. என சீன நாட்டுப் பேரறிஞரும், தத்துவஞானியும், தீர்க்கதரிசியுமான கன்பூசியஸ் கூறியுள்ளார்.
எனவே பொதுவாக அறிவு என்பது ஏதேனும் ஒன்றைப் பற்றிய பரீட்சையம் அறிவு என அறியப்படுகின்றது.
நமக்கு வெளியில் உள்ள அனைத்துப் பொருட்களைப் பற்றியும், நமது புலன்கள் மூலம் அறிதல் அறிவு எனச் சுருக்கமாகக் கூறலாம்.
அதாவது புறநிலையை, யதார்தத்தை, நமது புலன்கள் மூலம் அறிந்து, அதை நமது அகநிலைக் கருத்தாக ஆக்கிக்கொள்வதே அறிவு எனலாம். அறிவு இல்லாமல் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது.
தொல்காப்பியம் கூறும் அறிவு
தொல்காப்பிய மரபியல் பாடல் ஆனது ஆறு வகையான அறிவினைப் பற்றி கூறியுள்ளது.
“ஓரறிவு உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனோடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொரு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றோடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றோடு மனமே”
உடல், நாக்கு, மூக்கு, கண், செவி மற்றும் மனம் அதாவது கற்பனையாற்றல் ஆகிய ஆறு புலன்களையும் அறிவு எனக் குறிப்பிடுகின்றது தொல்காப்பியம்.
பிறருக்குத் தெரியாத ஏதேனும் ஒரு தகவல் நமக்குத் தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.
நமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ள நாம் மெய், செவி, மூக்கு, நாக்கு கண் மற்றும் கற்பனை ஆற்றல் என்ற ஆறு புலன்களை பயன்படுத்தி தெரிந்து கொள்வோம்.
எனவே புதுப் புது தகவல்களை அறிந்து கொள்ள உதவும் உடல் புலன்களை அறிவு எனக் குறிப்பிடுவது சரியானதே!
Read more: பகுத்தறிவு என்றால் என்ன